ஜஹாங்கீர்புரியில் குடியிருப்புகளை அகற்ற வந்த புல்டோசரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார் சிபிஎம் அரசியல் தலைமைகுழு உறுப்பினர் பிருந்தா காரத்
வடக்கு தில்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் சனிக்கிழமை ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியை சுற்றிலும் 1,250 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை காலை தொடங்கினர்.
வன்முறை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இஸ்லாமிய மக்களின் குடியிருப்புகள் மட்டும் அதிகாரிகளால் திட்டமிட்டு இடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், கட்டிடங்களை இடிக்ககூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தும், நீதிமன்ற ஆணை எங்களுக்கு கிடைக்கவில்லை எனக் கூறி அதிகாரிகள் தொடர்ந்து ஜஹாங்கீர்புரி பகுதியில் உள்ள இஸ்லாமியர்கர்கள் கட்டிடங்களை இடித்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், கட்டிடங்களை இடித்த புல்டோசரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டு கட்டிடங்கள் இடிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.