மதுபான கொள்கை ஊழல் வழக்கில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி மதுபானக் கொள்கை தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்து, ஏப்ரல் 1 ஆம் தேதி தில்லி திகார் சிறையில் அடைத்தது. இதையடுத்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்பின், ஜூன் 2 ஆம் தேதி மீண்டும் கெஜ்ரிவால் சிறைக்கு சென்றார்.
இதைத்தொடர்ந்து, தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதால், அதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என தில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி நியாய் பிந்து முன்பு நடைபெற்றது. நேற்று இந்த வழக்கின் விசாரணையை ஒருநாள் ஒத்திவைத்திருந்த நீதிபதி, இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், அமலாக்கத்துறை சார்பில் இந்த உத்தரவை அமல்படுத்த 48 மணிநேரம் இடைக்காலத் தடை கோரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அமலாக்கத்துறை கோரிய அவகாசத்தை அளிக்க மறுத்துவிட்டது. இதனால், வெள்ளிக்கிழமை ரூ.1 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரத்தை செலுத்திய பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வெளியேறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.