india

img

மத்திய பாஜக அமைச்சர்- தூதுக்குழுவினரை விரட்டியடித்த உத்தரப்பிரதேச விவசாயிகள்....

லக்னோ:
விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளில் கடந்த 3 மாதங்களாக பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை பாஜக அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். இதற்கு விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் வேளாண்ட சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை சந்திக்க தூதுக்குழுவை அனுப்பிய மத்திய அமைச்சர் சஞ்சீவ் பாலியனை, கிராமத்தில் நுழைய மக்கள் எதிர்ப்பு  தெரிவித்தனர். மக்களின் கொந்தளிப்பால் அமைச்சர் அங்கிருந்து கிளம்பினார். உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தின் பைன்ஸ்வால் கிராமத்தை சேர்ந்த  விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை  நடத்தி வருகின்றனர். அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக  மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் சஞ்சீவ்  பாலியன் தலைமையிலான குழு சென்றது. அவருடன், உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்கள்,  பாஜக நிர்வாகிகள் உடன் சென்றனர். முன்னதாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை  நடத்துவதற்காக போராட்டம் நடக்கும் இடத்திற்கு முன்பாக சில மீட்டர்  தூரத்தில் தூதுக்குழு ஒன்று அனுப்பப்பட்டது.

ஆனால், கிராமத்திற்குள் நுழைவதற்கான வழியில் விவசாயிகள் டிராக்டர்களை வழிமறித்து தூதுக்குழு கிராமத்தில் நுழைய எதிர்ப்பு தெரிவித்தனர். இதுமட்டுமின்றி முர்தாபாத்தில் பாஜகவினருக்கு எதிராக  முழக்கங்களை எழுப்பினர். இதனால் அமைச்சர் பாலியனின் ஆதரவாளர்களுக்கும், கிராமவாசிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள்  சங்க தலைவர் காப் சவுத்ரி கூறுகையில், ‘அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தாங்களும் ஒரு விவசாயிகளாக பேச  வேண்டும். அதற்கு முன் அவர்களை சந்தித்து பேச விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

;