india

img

தேசிய பத்திரிகை தினம்: உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசையில் பின்தங்கிய நிலையில் இந்தியா

இந்தியாவில் இன்று நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில் 180 நாடுகள் கொண்ட உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 150-ஆவது இடத்தை பெற்று மிகவும் பின்தங்கியுள்ளது.

தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16-ஆம் நாள் தேசிய பத்திரிகை தினமாக 1996-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.

2016-ஆம் ஆண்டிற்கான தரவரிசையில், இந்தியா 133-ஆவது இடத்தை பிடித்திருந்த நிலையில், 5 ஆண்டுகளில் 17 இடங்கள் சரிந்து 150-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய பயன்பாட்டாளர்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் அளவையும் அத்தகைய சுதந்திரத்தை மதிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளையும் வைத்து உலக பத்திரிகை சுதந்திர குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அறிக்கையில் 142-ஆவது இடத்திலிருந்த இந்தியா மோசமான பத்திரிகை சுதந்திரங்கள் கொண்ட உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் சார்புடைய ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமைகள் பறிப்பு போன்ற நிகழ்வுகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது. 2014 ஆண்டு பாஜக ஆட்சி தொடங்கியதிலிருந்து இந்து தேசியவாதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தின் விளைவாக, இந்திய பத்திரிகைகள் மிகவும் முற்போக்கானவையாகக் கருதப்பட்டன, ஆனால் 2010 களில் நடுப்பகுதியில்  மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து நிலைமை தலைகீழாக மாறியது. பாஜக உறுப்பினர்கள் மற்றும் பாஜகவிற்கு ஆதரவானவர்களால் ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. 80 கோடி இந்தியர்களால் பின்தொடரப்படும் 70க்கும் அதிகமான ஊடக நிறுவனங்களுக்கு உரிமையாளர் மோடியின் நண்பரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி என்பதே முதன்மையான உதாரணம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அரசின் முரணான அறிக்கைகளுக்கு எதிராக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. கொரோனா தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக 55 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டதை எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

;