தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்று வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் வங்கித்துறையில் கிளர்க் பணிகளுக்கு மாநிலத்தின் அலுவல் மொழி கட்டாயமில்லை என வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமாக ஐபிபிஎஸ் அறிவிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு வங்கி பணிகளுக்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள 849 பேரில் 400 பேர் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அகில இந்திய ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் தொழிலாளர் நலசங்க பொதுச் செயலர் ஜி.கருணாநிதி, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் 20 முதல் 30 சதவிகிதம் வெளிமாநிலத்தவர்களே பணியமர்த்தப்பட்டு வந்ததாகவும், தற்போது, அந்த எண்ணிக்கை 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டுக்கான பணியாளர் தேர்வு பட்டியலில் 50 சதவிகிதத்துக்கு அதிகமானோர், தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்களே இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பாக இந்திய வங்கிகளின் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளில் பணியாற்றுவதால், வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவை பெறுவதில் பாதிப்பு ஏற்படுவதும், தமிழ் பணியாளர்களிடம் செல்லுமாறு அவர் கைகாட்டி விடுவதும் வாடிக்கையாக உள்ளது.
தமிழ் தெரியாமல் பணியில் சேரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநில மொழியை கற்றுக்கொள்ள 3 மாத அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதற்குள் தமிழ் கற்றுக்கொள்ளாதவர்களை தகுதிநீக்கம் செய்யப்படாமல், கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.