பெரும்பான்மை மக்களை கல்வி கற்பதிலிருந்து அப்புறப்படுத்திடும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப்பிரதேச மாநில 16ஆவது மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப்பிரதேச 16ஆவது மாநில மாநாடு போபாலில் ஜனவரி 16-18 தேதிகளில் நடைபெற்றது. அதன் மாநில செயலாளராக ஜஸ்வீந்தர் சிங்கை மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
சீத்தாராம் யெச்சூரி
மாநாட்டில் நிறைவுரையாற்றிய, கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நம் நாட்டிலும் சரி மற்றும் உலகத்திலும் சரி கொடுங்கோன்மை மிக்க ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களில் இறுதி வெற்றி மக்களுக்கே கிடைத்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:
“உழைக்கும் மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களையெல்லாம் எப்படித் தியாகங்களைச் செய்து, அவற்றிலிருந்து மீண்டு, வெற்றி பெற முடியும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.
இடதுசாரிகள் பலவீனமாகிவிட்டார்கள் என்று கூறுவது கற்பனையே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது இடதுசாரிகளின் பலத்தை அளப்பதற்கு நாடாளுமன்றத்தில் அதற்குள்ள பலத்தை வைத்து மட்டும் பார்க்கக்கூடாது. மக்களுக்கும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கும் இடையேயுள்ள உறவுகளையும் அவர்கள் தங்கள் பிரச்சனைகளை சரிசெய்து கொண்டு எப்படி முன்னேறுகிறார்கள் என்றும் பார்த்திட வேண்டும். சமீபத்தில் நாட்டில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் அனைத்திலும் இடதுசாரிகள் முன்னணியில் நின்றார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற வரலாறு படைத்திட்ட விவசாயிகள் போராட்டத்திலும், கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த நான்காவது அகில இந்திய வேலை நிறுத்தத்திலும் இடதுசாரிகளின் பங்களிப்பைக் கூறினால் அதுவே இதற்கு விளக்கமாக அமைந்திடப் போதுமானதாகும். வரவிருக்கும் காலங்களில் இதனை மேலும் விரைவுபடுத்திட வேண்டும்.
மத்தியப்பிரதேசத்திலும்கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் உள்ளூர்ப் பிரச்சனைகளின் மீது கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்தி வேகத்துடன் முன்னேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக இங்கே மாநாட்டில் பிரதிநிதிகள் விவாதங்களில் தெரிவித்த விஷயங்கள் அவற்றை நன்கு காட்டுகின்றன. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
மாநாட்டின் இரண்டாவது நாள் உரையாற்றிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, பாஜக-வின் ஆட்சியின்கீழ் மாநிலத்தில் சமூக அநீதி அதிகரித்துக்கொண்டிருப்பதையும், மனு(அ)தர்மத்தின் அடிப்படையில் ஆட்சியை நடத்திட வேண்டும் என்று அது விரும்புகிறது என்றும் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் மனு(அ)தர்மக்கொள்கைகளை எதிர்த்து முறியடித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். மாநிலத்தில் இயக்கத்தை விரிவுபடுத்திட பல்வேறு பரிந்துரைகளையும் தெரிவித்தார்.
மாநாட்டில் மாநிலம் முழுதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிக்கொண்டிருந்தபோதிலும், மொத்த பிரதிநிதிகளில் 90 சதவீதத்தினர் மாநாட்டில் பங்கேற்றார்கள். மொத்தம் 197 பிரதிநிதிகள்/பார்வையாளர்கள் பங்கேற்றார்கள். செயலாளர் அறிக்கை ‘பிரதிநிதிகளின் விவாதத்திற்குப் பின் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநாட்டில் 30 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. அது ஜஸ்வீந்தர் சிங்கை மீண்டும் மாநில செயலாளராகத் தேர்வு செய்தது. 11 உறுப்பினர் கொண்ட மாநில செயற்குழுவும், கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கான பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய கல்விக்கொள்கையானது கல்வியில் வணிகமயத்தை அதிகரிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், இது அமல்படுத்தப்பட்டால் பெரும்பான்மையான குடும்பத்தினருக்கு கல்வி மறுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மாநாட்டில் சமூகத்தின் பல்வேறு பிரிவினரைப் பாதிக்கும் பிரச்சனைகள் மீதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.