இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர் நீக்கப்பட வேண்டும் என்றும், அதானி குழுமத்தின் பங்குச்சந்தை தில்லுமுல்லுகள் குறித்து விசாரணை செய்திட கூட்டு நாடாளுமன்றக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
அதானி குழுமம் பங்குச்சந்தை விலைகளில் தில்லுமுல்லுகள் செய்ததை ஏற்கனவே வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த ஹிண்டர்பர்க் ஆய்வுகள், இப்போது இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தலைவர், திருமதி மாதாபி பூரி புச் என்பவருக்கு எதிராக மிக ஆழமான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறது. அவை, திருமதி மாதாபியும் அவருடைய கணவரும் அதானி குழுமங்களில் முதலீடு செய்வதற்காக வினோத் அதானியால் பயன்படுத்தப்பட்டு வரும் போலி நிதி நிறுவனங்களின் பங்குகளை வைத்திருந்த ஆவணங்களை மேற்கோள் காட்டியிருக்கின்றன.
இத்தகைய குற்றச்சாட்டுகள் பங்குச்சந்தை வணிகத்தை முறைப்படுத்தும் நிறுவனத்தின் தலைவருக்கு எதிராக எழுப்பப்பட்டிருக்கும் நிலையில், ஒரு முறையான புலன்விசாரணை நடத்தப்படும் வரையில் அந்நிறுவனத்தின் தலைவர் ஓரங்கட்டப்படுதல் அவசியமாகும்.
அதானி குழுமத்தின் பங்குச் சந்தை முறைகேடு தொடர்பான முழு விவகாரத்தையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கட்சியின் அரசியல் குழு மீண்டும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.