headlines

img

பிரதமரின் பேச்சும்  உண்மை நிலையும்

 திறந்தவெளியில் மலம் கழிப்பதிலிருந்து இந்தியா விடுதலைபெற்றுவிட்டதாக பிரதமர் மோடி பெருமை பொங்க பேசியிருக்கிறார். உண்மை நிலை என்னவென்பது நாள் தோறும் அவதிப்படும் மக்களுக்கு தெரியும். முறை யான கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளி யில் மலம் கழிக்கும் நிலை நாட்டின் பல்வேறு இடங்களில் இன்னமும் உள்ளது. இதில் நகரம், கிராமம் வேறுபாடு இல்லை. ஒரே வேறுபாடு நகர மக்களுக்கு திறந்தவெளி யில் மலம் கழிக்க இடமில்லை. ரயில்பாதை யோரம் உள்ள இடம்தான். கிராமப்புற மக்களுக்கோ ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடம் உள்ளது. அதிலும் சில இடங்களில் தலித் மக்கள் சந்திக்கும் பிரச்சனை சொல்லி மாளாது. ஆண்களை விட பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிகாலையிலே எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பே இயற்கை உபாதைகளை முடிக்க வேண்டியுள்ளது. மாலை நேரங்களில் பூச்சிகள் மற்றும் சமூகவிரோதி களின் தொல்லையால் பலர் மலம் கழிக்க செல்வதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் உடல் உபாதைகளை எதிர்கொண்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதே நிலைதான்.  மத்தியஅரசின் திறந்த வெளி கழிப்பிட ஒழிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை கள் தரமற்ற கட்டுமானம் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற ஓராண்டு கழித்து இந்தியா வில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனி கழிப்பறைகள் இருக்கின்றன என்றார். ஆனால் 2018-ல் வெளி யான கல்வி அறிக்கையொன்றில் கிட்டத்தட்ட அரசு பள்ளிகளில் உள்ள 23விழுக்காடு கழிவறைகள் உபயோகப்படுத்த முடியாதவை என குறிப்பிடப்பட்டுள்ளது. திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை யில் இருந்து விடுபட்டுள்ள மாநிலமாக மகா ராஷ்டிரா முதலில் அறிவிக்கப்பட்டது. இதை யடுத்து அரசுசாரா தொண்டு நிறுவனம் ஒரு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கே 25விழுக்காடு வீடுகளில் கழிவறைகள் இல்லை என்பதும் அவர்கள் திறந்த வெளியில் மலம் கழித்து வருவதையும் கண்டறிந்தது.இதே போல் பிரதமரின் குஜராத் மாநிலம் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை இல்லா மாநிலமாக 2017 அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு ஆண்டுக்குப்பிறகு அதிகாரப்பூர்வ தணிக்கை யில் 29 விழுக்காடு வீடுகளில் இன்னும் கழிவறை இல்லை எனத் தெரியவந்தது. எனவே கிராமப்புறப் பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை நிறுத்த அப்பகுதிகளில் வசிப்பவர்கள் எளிதாக அணுகும் வகையில் கழிப்பறைகள் கட்டித்தரப்பட வேண்டும், நகரப் பகுதிகளில் அனைத்து வீடுகளி லும் கழிப்பறைகள் கட்டுவது, பொதுக் கழிப்பிடங்கள் நாள்தோறும் முறையாக பரா மரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவது ஆகிய வற்றால் மட்டுமே திறந்தவெளியில் மலம் கழிப்பதில் இருந்து இந்தியாவை விடுவிக்க முடியும். எனவே மத்திய அரசு இனியும் பெருமை பேசித்திரியாமல் அக்கறையுடன் செயல்பட்டால்தான் இந்த மோசமான நிலையை மாற்றமுடியும்.

;