நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்குத் தேசிய தகுதித் தேர்வான நீட் கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய வர்கள் என்பதால்தான் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இருப்பினும் அந்த சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முட்டுக்கட்டை போட்டார். சட்டத்தைத் தீவிரமாகப் பரிசீலிக்க நான்கு வார காலம் அவகாசம் தேவை என்றும் கூறி வேண்டுமென்றே காலதாமதம் செய்தார். அவரது ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல் உள் ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது தொடர்பான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டி ருக்காவிட்டால் இந்தாண்டு மட்டும் 300க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்து வக்கனவு தகர்ந்து போயிருக்கும்.
மாநில அரசின் இந்த நடவடிக்கையை பொறுத்துக்கொள்ளமுடியாத சிலர் பாஜக ஆசிர் வாதத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்றனர். அவர்கள் தாக்கல் செய்த மனு விசார ணைக்கு வந்தபோது ஒன்றிய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு, அரசுப் பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பதற்குப் பதில் எதிர்ப்போ ருக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள் ளது. அதாவது 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது நீட்தேர்வை நீர்த்துப்போகச்செய்யும் வகை யில் உள்ளதாக ஒன்றிய அரசு புலம்பியுள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்களைத் தூண்டி விட்டதே ஒன்றிய அரசும் பாஜகவும் தான் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
இட ஒதுக்கீட்டால் தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவான கருத்தை ஒன்றிய அரசு திரும்பத் திரும்ப கூறிவருகிறது. முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். நீட் தேர்வு இல்லை என்றால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டிய சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றியிருக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. மருத்துவப்படிப்புக்கான மாணவர்களை மாநில அரசே தேர்வு செய்தபோது ஏராளமான ஏழை மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. நீட்தேர்வு வந்த பிறகுதான் எல்லாம் தலைகீழாக மாறியது.
உக்ரைனில் உயிரிழந்த கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் எஸ்எஸ்எல்சியில் 96 சதவீதமும், பியூசியில் 97 சதவீதமும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். அப்போதும், அவருக்கு இந்தியாவில் மருத்துவ இடம் மறுக் கப்பட்டது. அவரின் மரணத்துக்கு நீட் தேர்வே காரணம்.
உயர்கல்வி என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்கிறது, இல்லாதவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தகுதி என்ற போர்வையில் திறமையான ஆனால் பொருளாதார ரீதியாக நலி வடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் நீட் தேர்வு அநியாயத்தின் பிரதிபலிப்பே நவீனின் சோக மரணம்.
சமூக கட்டமைப்பில் உள்ள சமமற்ற நிலையை அகற்றவே 7.5விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எதிர்ப்பது என்பது தமிழக மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.