ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஒட்டம் பிடித்த பின்னர் அரசு நிர்வாகத்தை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அந்நாட்டில் இருந்து துயர மான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் சமீபத்திய செய்தி மரண தண்டனை, கை கால்களை துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் கொண்டு வரப்படும் என தலிபான்கள் அறிவித்திருப்பதுதான். இதற்கு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர் வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் தலிபான்கள் இதுபோன்ற கொடூரமான தண்டனைகளை தந்தபோதும் அதை அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் கண்டுகொள்ளவில்லை. ரஷ்யாவுக்கு எதிராக தலிபான்களை கொம்பு சீவிவிட்ட வளர்ந்த நாடுகள் அந்த நாட்டை ஆக்கிரமித்த பின்னர் பயங்கரவாதத்தை ஒழிக்கவோ, ஜனநாயகத்தை உருவாக்கவோ இயலாமல் படுதோல்வியடைந்து வெளியேறியுள்ளன. தலிபான்கள் புதிய ஆட்சி யை நிறுவினாலும் கூட பெண்களுக்கு உரிய பங்களிப்பை அவர்கள் அளிக்கவில்லை. மேலும் கல்வி, வேலைவாய்ப்பு உட்பட பெண்களுக்கான உரிமைகளை மறுத்துள்ளனர்.
பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு, குறிப்பிட்ட கல்வி நிலையங்களில் மட்டும் பெண்களுக்கு அனுமதி, அவ்வாறு அனுமதிக்கப் படும் பெண்களும் திரைச்சீலை உதவியுடன் தனி யாக பிரித்து அமரவைக்கப்பட்டிருப்பது, முகம் முதல் கால் வரை `ஹிஜாப் எனப்படும் கருப்பு ஆடைகளால் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும் என கண்டிப்பான விதிமுறைகளை அவர்கள் வகுத்துள்ளனர்.
காபூல் நகரைக் கைப்பற்றியபோது தலிபான்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக இப்போது செயல் படுகிறார்கள். 1996-2001ஆம் ஆண்டுவரை இருந்த அரசைப் போல் தலிபான் அரசு இருக்காது, பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில் அதிலிருந்து பின்வாங்குவது கவலையளிக்கிறது. பெண்கள் பணிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தங்கள் உரிமையைக் கேட்டும், கல்வி, வேலை வாய்ப்பு உரிமையைக் கேட்டும் பெண்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
ஆசிரியர்கள், மாணவிகளின் எதிர்காலம் குறித்து சர்வதேச கல்வியாளர்களும், குழந்தை கள் நல ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ள னர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமை யில் அமைந்துள்ள இடைக்கால அரசில் கல்வி அமைச்சராக இருக்கும் ஷேக் அப்துல்பாகி ஹக்கானி இனி கல்விரீதியான நடவடிக்கைகள் ஷரியத் சட்டப்படி இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மகளிர் நலத்துறை அமைச்சகத்தில் பணி யாற்றிய பெண் ஊழியர்களை தலிபான்கள் அனு மதிக்கவில்லை. அங்கு ஆண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் நலத்துறை அமைச்சகத்தின் பெயரையும் தலிபான் அரசு “ஊக்குவித்தல் மற்றும் நல் ஒழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமையைத் தடுத்தல் துறை” என்று மாற்றியுள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் தலிபான்கள் பெண்களை அனுமதிக்காத நிலை யில் ஆப்கானிஸ்தானின் கலாச்சாரத்தையே அவர்கள் சீர்குலைத்து வருவது கவலையளிக்கும் செய்தியாகும். ஆப்கானில் உள்ள பெண் குழந்தை கள் அச்சமின்றி தொடர்ந்து கல்வி கற்கவும் பெண்களின் உரிமையை பாதுகாக்கவும் உலக நாடுகள் தலிபான்களை நிர்ப்பந்திப்பது அவசியம்.