இறுதிக்கு முன்னேறுவது யார்?
பிரான்ஸ்-மொராக்கோ வியாழனன்று அதிகாலை பலப்பரீட்சை
கத்தார் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதனன்று அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கியது. வியாழனன்று அதிகாலை நடைபெறும் 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி, ஆப்பிரிக்க இளம் அணியான மொராக்கோவை எதிர்கொள்கிறது.
இரண்டாவது அரையிறுதி
பிரான்ஸ் - மொராக்கோ
வெற்றி வாய்ப்பு
பிரான்ஸ் - மொராக்கோ
63% 37%
நேரம் : நள்ளிரவு 12:30 மணி (வியாழனன்று அதிகாலை)
இடம் : அல் பாயித்
களநடுவர் : சீஸர் ரமோஸ் (மெக்ஸிகோ)
இரு அணிகளின் பலம், பார்ம் ஆகியவற்றை ஒப்பிடுகையில் பிரான்ஸ் அணி நல்ல நிலையில் இருப்பதால் அந்த அணி இறுதிக்கு முன்னேற சகல வாய்ப்புகள் உள்ளது. ஆனால் “இளம் கன்று பயமறியாது” என்பது போல நடப்பு உலகக்கோப்பை சீசனில் மிரட்டலாக விளையாடி, முதன்முறையாக (ஆப்பிரிக்க கண்டத்திலும்) அரை யிறுதிக்கு முன்னேறியுள்ள மொராக்கோ அணியை பிரான்ஸ் அணி கவனமாக எதிர்கொண்டால் இறுதி வாய்ப்பு நன வாகும். இந்த ஆட்டத்தில் ஆருட கணிப்புகள் கூற முடியாது. காரணம் மொராக்கோ கணிக்க முடியாத அணியாக இருப்பதால் ஆட்டத்தின் நிலைமை எப்பொழுது வேண்டுமானாலும் மாறலாம். இதனால் யாருக்கு வெற்றி என திடமாக கருத்து கூற இயலாது.
6 அடியில் கலக்கும் மொராக்கோ...
22-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் புதிய வரலாறுடன் அரையிறுதிக்கு முன் னேறியுள்ள ஆப்பிரிக்க இளம் அணி யான மொராக்கோ கத்தார் மண்ணில் சாதித்ததற்கு துல்லியமான ஆட்டத் திறன், இடைவெளி இல்லா சுழலும் சுறுசுறுப்பு, மின்னல் வேக ஓட்டம் என பல்வேறு காரணங்கள் இருந்தா லும், முக்கிய காரணமாக இருப்பது மொராக்கோ வீரர்களின் உயரம்தான். மொராக்கோ வீரர்கள் பெரும்பாலும் 6 அடிக்கு மேல் உயரமாக உள்ளனர். இதனால் எதிரணிகளின் கார்னர் கிக், ஸ்கை ஷாட், சூப்பர் ஷாட் போன்ற வாய்ப்புகளை அபாரமாக முட்டுதல் மூலம் தடுத்து விடுகின்றனர். எல்லா அணிகளிலும் ஒரே மாதிரி உயர மான வீரர்கள் இருப்பதில்லை. ஆனால் மொராக்கோ அணியில் 80% வீரர்கள் 6 அடிக்குமேல் உள்ளனர். இந்த ஒரு பிளஸ் பாயிண்டால்தான் மொராக்கோ அணி அரையிறுதி வரை முன்னேறி அதிசயம் நிகழ்த்தி யுள்ளது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் போதியளவு உயரமாக இருந்தால் சரியாக ஓட முடியாது என்ற வரலாறு இருந்தா லும், கடின பயிற்சியால் மொராக்கோ வீரர்கள் களத்தில் சிட்டுக்குருவி போல பறக்கின்றனர்.
பாலஸ்தீனம் ஆதரவு பிரச்சனை
பிரான்ஸ் - மொராக்கோ ரசிகர்களுக்குள் மோதல் உருவாக வாய்ப்பு?
உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஆப்பிரிக்க கண்டம் சார்பில் அரையிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை பெற்ற மொராக்கோ அணிக்கு விளையாட்டு உலகம் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர். ஆனால் பாராட்டுகளை விட பல்வேறு சுவாரஸ்ய மற்றும் சர்ச்சை சம்பவங்களும் அரங்கேறின.
சுவாரஸ்யம்
காலிறுதி வெற்றிக்கு பின் மைதானத்திலேயே பாலஸ்தீன நாட்டின் கொடியை மொராக்கோ வீரர்கள் கையிலேந்தி பாலஸ்தீனத்தை பாதுகாப்போம் என்ற கோரிக்கையுடன் கோஷங்களை எழுப்பினர். மொராக்கோ வீரர்களின் இந்த செயல் உலகம் முழுவதும் பரவ, பாலஸ்தீனத்தில் மொராக்கோ அணிக்கு நன்றி அறிவிப்பு பேரணியும், உலகக்கோப்பையை கைப்பற்ற மொராக்கோவிற்கு ஆதரவு அளிப்பதாகவும், பாலஸ்தீனம் - மொராக்கோ கொடிகளை இணைத்து பல்வேறு ஊர்வலங்கள் பாலஸ்தீனத்தில் நடைபெற்றன.
சர்ச்சை... பாரீஸ் கலவரம்...
பிரான்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க ரசிகர்கள் மொராக் கோவின் காலிறுதி வெற்றியை கொண்டாடினர். சிலர் பாலஸ்தீன கொடியுடன் கொண்டாட பிரான்ஸ் போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத் தில் பிரான்ஸ் போலீசாருக்கும் - ஆப்பிரிக்க ரசிகர்களுக் கும் மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கி முனை யில் போலீசார் வன்முறையை தடுக்க முயன்றனர். பதிலுக்கு தங்கள் வைத்திருந்த பட்டாசுகளை போலீசார் நோக்கி எரிய பாரிஸில் கலவரம் பூண்டது. கலவரம் ஒருவழியாக கட்டுக்குள் வர, பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி, மொராக்கோ அணியுடன் மோதும் சூழல் உருவாகியது. பிரான்ஸ் நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கும் ஆப்பிரிக்கர்கள் தனியாக பிரிந்து மொராக்கோவிற்கும், பிரான்ஸ் நாட்டவர்கள் தங்கள் தேசிய அணிக்கும் ஆதரவு பிரச்சாரம் மேற்கொண் டனர். இதனால் பிரான்ஸ் நாட்டில் பதற்றமான சூழல் உள்ளது. வியாழனன்று அரையிறுதி முடிவால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பிரான்ஸ், இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் ரகசிய பாதுகாப்பு போடப் பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் மொராக்கோவிற்கு பெருகும் ஆதரவு
தேசியத்தை கடந்து மொராக்கோ அணிக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. கண்டத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்கர்கள் பிரிவினை இன்றி மொராக்கோவிற்கு ஆதரவாக கத்தாரில் குவிந்துள்ளனர். மொராக்கோ வீரர்களின் பாலஸ்தீன ஆதரவு சம்பவத்தால் பாலஸ்தீனம், பாலஸ்தீன ஆதரவு இஸ்ரேல் மக்கள், துருக்கி, துனிசியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான ரசிகர்கள் மொராக்கோவிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். மேலும் தங்கள் நாடு வெளியேறிய பொழுதிலும் பெரும்பாலான நாட்டின் ரசிகர்கள் மொராக்கோவின் மாயாஜாலத்தை காண கத்தாரில் பயண காலத்தை நீட்டித்துள்ளனர். இதுபோக கத்தாரில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள், இஸ்லாமிய நாடுகளான ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மொராக்கோவிற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கை உருவாக்கியுள்ளன.
பாலஸ்தீன பகுதியான காசாவில் நடைபெற்ற மொராக்கோ ஆதரவு கொண்டாட்டம்.