விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து சீசனில் நாக் அவுட் சுற்று நிறைவு பெற்ற நிலையில், அர்ஜெண்டினா, பிரேசில், குரோஷியா, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், மொரோக்கோ, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் காலிறுதி ஆட்டங்கள் வெள்ளியன்று தொடங்குகிறது.
இன்று காலிறுதி ஆட்டங்கள் தொடக்கம்
பிரேசில் குரோஷியா
வெற்றி வாய்ப்பு
71% 29%
கேப்டன்(நெய்மார்) - கேப்டன் (மோட்ரிச்)
நேரம் : இரவு 8:30 மணி
இடம் : எஜுகேஷன் சிட்டி
பலம், பார்மில் இரு அணிகளையும் ஒப்பிடுகையில் பிரேசில் அணி பிரம்மாண்டமாக உள்ளது. அணியில் ஒற்றுமை, இளம் வீரர்களின் பறக்கும் ரன்னிங் (ஓட்டம்), இரு களத்திலும் (முன், பின்) தடுப்பாட்ட தாக்குதல் முறை, பயிற்சியாளரின் கண்டிப்பால் வீரர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுதல் போன்ற சிறப்பு அம்சங்களுடன் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற பிரேசில், குரோஷியா அணியை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல அனுபவ வீரர்கள் இருந்தும் பதற்ற பார்மின்மையால் குரோஷியா திக்கு திணறிதான் காலிறுதிக்கு வந்தது. இதனால் பிரேசிலை குரோஷியா வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவது சற்று சிரமமான காரியம். கள நடுவர் : மைக்கேல் ஓலிவர்
அர்ஜெண்டினா நெதர்லாந்து
வெற்றி வாய்ப்பு
75% 35%
கேப்டன் (மெஸ்ஸி) - கேப்டன் (விர்ஜில்)
நேரம் : நள்ளிரவு 12:30 மணி (சனியன்று அதிகாலை) இடம் : லுஸைல்
மெஸ்ஸியின் அனுபவம், இளம் வீரர்களின் மிரட்டலான அதிரடி, லீக், நாக் அவுட் சுற்றுகளின் ஆட்டத்திறன் ஆகியவற்றை உற்றுநோக்கினால் நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்து அணியும் அர்ஜெண்டினா அணியை போல சொதப்பல் இல்லாமல் சூப்பர் பார்மில் தான் காலிறுதிக்கு முன்னேறியது. இதனால் அரையிறுதிக்கு முன்னேற நெதர்லாந்து அணிக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், பலம்,வீரர்களின் செயல்திறனில் அர்ஜெண்டினா பிரம்மாண்டமாக உள்ளது. புரியும்படி சொன்னால் அர்ஜெண்டினாவை நெதர்லாந்து சமாளிப்பது மிகவும் சிரமமான விஷயம் ஆகும். திறமையான பல இளம் வீரர்களை வைத்து ஏதேனும் மாயாஜால அதிர்ச்சி மூலம் நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறினால் பார்க்கலாம்.
கள நடுவர் : அந்தோனியோ மாத்யூ (ஸ்பெயின்)
இவர் வேற மாதிரி
உலகக்கோப்பையை மிரட்டும் பிரேசில் பயிற்சியாளர்
22-வது சீசன் உலகக்கோப்பையில் கோல் மழை, வீரர்களின் அதிரடி ஆட்டம், இளம் அணிகளின் அசத்தல் வெற்றி, சீனியர் நாடுகளின் அதிர்ச்சி தோல்வி என பல விசயங்கள் அரங்கேறினாலும், ஒரே ஒரு சுவாரஸ்ய சம்பவம் மட்டும் இன்னும் குறிப்பிடாமல் உள்ளது. அது யாதெனில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் பிரேசில் அணியின் பயிற்சியாளரின் குணநல அம்சங்கள் தான். பொதுவாக கால்பந்து உலகில் அணியின் பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு அறிவுரை வழங்க மைதானத்தில் கத்துவார்கள், ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள், அங்கும் இங்கும் பதற்றத்தில் இருப்பார்கள், தங்கள் அணி கோலடித்தால் கொண்டாடுவார்கள், தோற்றால் எரிச்சல் அடைவார்கள். இதுதான் கால்பந்து உலகில் பயிற்சியாளர்களின் நிலை. ஆனால் பிரேசில் பயிற்சியாளர் டிடே இதற்கு எதிர்மாறாக உள்ளார்.
டிடே குணநலன்கள்
1. அமைதியாக ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியையும், வீரர்களின் செயல்திறனையும் கணிப்பார்
2. மற்ற நாட்டினரை போல மைதானத்தில் வீணாக கத்த மாட்டார்.
3. ஒழுங்காக களத்தில் விளையாடவில்லை என்றால் கேப்டன் நெய்மாராக இருந்தாலும் பெஞ்ச்சில் தான்
4. களத்தில் வீரர்களுக்கு தேவையில்லாமல் மைதான அறிவுரை கிடையாது
5. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வியூகம் கொடுத்துவிடுவார். அதனை தேர்வுக்கு படிப்பது போல மனப்பாடம் செய்து வீரர்கள் செயல்பட்டால் நல்லது. இல்லையென்றால் பெஞ்ச்தான்
6. கோலடித்தால் கொண்டாட மாட்டார். சிறிய புன்னகை மட்டும் தான். (தென் கொரியா அணிக்கெதிரான நாக் அவுட் ஆட்டத்தின் கோலின் பொழுது நடனம் ஆடினார் - இது வானவில் தோன்றுவது போன்ற அறிய நிகழ்வாகும்)
7. வெற்றி வாய்ப்பு இருந்தால் மாற்று வீரர்களை மைதானத்தில் இறக்கி விடுவார்
8. தனிநபர் தங்க காலணி கனவு எல்லாம் டிடேவிடம் பலிக்காது
9. எரிச்சல், கோபம் எதுவும் கிடையாது
10. கண்ணசைவில் அணியின் கட்டுப்பாடு. டிடேவை பார்த்தாலே பிரேசில் வீரர்கள் ஆட்டத்திறனை மாற்றுகிறார்கள்
11. இளம் வீரர்கள், சீனியர்கள் வீரர்கள் யாராக இருந்தாலும் ஒரே கட்டுப்பாடுள்ள அறிவுரைதான் டிடேவின் கண்டிப்பால்தான் பிரேசில் வீரர்கள் கத்தார் சீசனில் எதிரணிகளை கதி கலங்க வைக்கின்றனர்.
உலகக்கோப்பை கோப்பையா? சர்ச்சைக் கோப்பையா?
உலகக்கோப்பை தொடரை கத்தாரிடம் கொடுத்து, உலகக்கோப்பை ஏற்பாடுகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நடத்திய விதம், சம்பளம், இறப்பு விகிதம், வெளிநாட்டு ரசிகர்களின் உடைக் கட்டுப்பாடு, வயது வந்தோர் பாலியல் கட்டுப்பாடு, ஓரினச்சேர்க்கை, மதுபான தடை, பெண்களை லென்ஸ் கேமரா மூலம் ரகசிய மற்றும் வெளிப்படையான கண்காணிப்பு போன்ற பல்வேறு சர்ச்சைகளுடன் கத்தாரில் உலக கால்பந்து சுழன்று வரும் நிலையில் தற்போது பிட்ச் என்ற மைதான பிரச்சனையும் சர்ச்சை லிஸ்டில் சேர்ந்துள்ளது. இது உலகக்கோப்பை கோப்பையா? சர்ச்சைக் கோப்பையா? என்று விவாதம் நடத்துவதுதான் பாக்கி.
மோசமான நிலையில் ஆடுகளங்கள்
பாலைவன பூமியான கத்தாரில் கொளுத்தும் வெயிலால் மரங்கள் தானாக முளைக்க கூட வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 22-வது சீசன் உலகக்கோப்பை தொடருக்காக வெளிநாட்டில் இருந்து செயற்கையாக மண், களிமண் போன்றவற்றை இறக்குமதி செய்து இயற்கைக்கு (விளையாட்டு சூழ்நிலை) மாறாக 7 கால்பந்து மைதானங்கள் அமைக்கப்பட்டது. ஒரு மைதானம் ஏற்கெனவே இருந்தது (லுஸைல்). கிரிக்கெட் மைதானம் அளவிற்கு பிட்ச் பார்ம் பிரச்சனை தேவையில்லை என்றாலும், கால்பந்து மைதானத்திற்கு ஓரளவு பார்ம் தேவைப்படும். அதாவது அடிக்கடி ஆட்டங்கள் நடத்த வேண்டும், அப்படி நடத்தினால் மண் புரளும், புற்கள் பெரிதாக, புதிதாக முளைக்கும். ஆனால் கத்தார் மைதானங்கள் உலகக்கோப்பை தொடங்க 100 நாள்களுக்கு முன்பு தண்ணீர் தெளிக்கும் வேலைக்காக திறக்கப்பட்டது. முன்பு எந்த ஆட்டங்களும் நடத்தப்படவில்லை. பிட்ச் ரிப்போர்ட் கூட கிடையாது. இப்படி விதிமீறல் செயலில் கத்தார் மைதானங்களில் உலக அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருவதால் வீரர்கள் கடுமையாக திணறி வருகின்றனர். எந்த மைதானங்களிலும் நன்கு பழக்கப்பட்ட அர்ஜெண்டினா, பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், தென் கொரியா, ஆப்பிரிக்க அணிகள் வேகமாக ஓடி பந்தை விரட்டுகிறது, துரத்துகிறது.ஆனால் மற்ற அணிகள் ஓடவே போராடுகிறது.
மாடு மேய்ந்து சென்ற பகுதி
பிட்ச் பகுதியே படுமோசமாக உள்ள நிலையில், கோல் கீப்பர் பகுதியை சொல்லவா வேண்டும். அப்பகுதி மாடு மேய்ந்து சென்ற தரைப்பகுதி போன்று களிமண் மட்டுமே காணப்படுகிறது. இதனால் கோல் கீப்பர், கோலடிக்க ஓடிவரும் வீரர்கள் தடுமாறி, வழுக்கி விழுகின்றனர்.