2032ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சென்ற ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி, ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். வழக்கமாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழா இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாகக் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், 2032 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டியானது, ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் 2018 காமன்வெல்த் போட்டிகளை நடத்திய கோல்ட் கோஸ்ட் உட்பட குயின்ஸ்லாந்து மாநிலம் முழுவதும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஒலிம்பிக் போட்டிகள் 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும், அதற்கடுத்த போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்ஜெலஸ் நகரிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.