election2021

img

விலைபோகாத சிபிஎம் வேட்பாளர்களை ஆதரியுங்கள்... புதுவையில் கே. பாலகிருஷ்ணன் பிரச்சாரம்...

புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர் ஆர். சரவணன்போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முத்தியால்பேட்டை முழுவதும் திறந்த வேனில் சென்று சிபிஎம் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

புதுச்சேரியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல்இது. இத் தேர்தலில் முத்தியால்பேட்டைதொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்சரவணனை வெற்றி பெறச் செய்தால், தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பிரச்சனைகளை சட்டப்பேரவை யில் வலியுறுத்துவார்.அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற  மாகே சுயேச்சை வேட்பாளரும் வெற்றிபெற்றால் 5 ஆண்டுகாலம் மக்கள் பிரதிநிதிகளாக மக்களுக்கு சேவை செய்வார்கள் என்ற உறுதியை உங்களுக்கு நாங்கள் அளிக்கிறோம்.தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பது யார், எந்த எம்எல்ஏ எந்தப் பக்கம் சாய்வார்கள் என தெரியாது. காற்று அடிக்கும் திசையில் சாய்ந்து போகும் சூழல் உள்ளது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சரவணன் வெற்றி பெற்றால், சுனாமியே வந்தாலும் கட்சி மாறாமல் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே நீடித்து செயல்படுவார். 

இதேபோல், பிற கட்சி எம்எல்ஏக்கள் நிலையாக இருப்பது சந்தேகம் தான். புதுவை மாநிலத்தில் எம்எல்ஏக்களை விற்பனை செய்யும் அரசியல் வியாபாரச் சூழல் தான் நிலவுகிறது. நமது வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்றால், அரசியல் வியாபாரத்துக்கு அடிபணியாமல், உண்மையான மக்கள் சேவகனாக இருப்பார்.பெட்ரோல், டீசல் விலை ஏறியுள்ளது. சமையல் எரிவாயு மானியம் குறைக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத்திட்டத்தை முடக்கிய தோடு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கும் வழங்கும் தாக்குதல் நிலை வந்துள்ளது. இந்த சூழல்மக்களை பாதுகாக்கவும், மின் கட்டணம் உயராமல் குரல் கொடுக்கவும், மக்களின் தேவைகளை போராடி பெறவும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாடுபடுவார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது குற்றச்சாட்டுகள் இல்லாமல் கறைபடாமல் இருக்கின்றனர். நாடுமுழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் நேர்மையாகச் செயல்படுகின்றனர். இவரும் அவ்வாறு செயல்படுவார். சட்டமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளை பேசுவதற்கும், கோரிக்கை களுக்காக அரசிடம் போராடவும், ஊழல்முறைகேடுகளை எதிர்த்துப் பேசவும்,மக்களின் உரிமைகளை நிலை நிறுத்தவும், அவர்களுக்காக குரல்கொடுக்கும் வகையில் இவர் திகழ்வார்.

இங்கு கடந்த காலங்களில் பலருக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளீர்கள். இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாய்ப்புத் தாருங்கள், அவர் மாற்றத்தை சட்டமன்றத்தில் நிகழ்த்துவார். புதுவையில் புதிய அரசு, எப்படி யார் தலைமையில் அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதுவையை பாஜக குறி வைத்துள்ளது. இதனால், பலரைவிலைக்கு வாங்கியுள் ளனர். ஆட்சியைப் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விலைக்கு வாங்கினால், எங்கள் எம்எல்ஏ விலை போக மாட்டார். அதனால், தரமான எம்எல்ஏவை தேர்ந்தெடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.முத்தியால்பேட்டை மணிக் கூண்டு எதிரில் இருந்து தொடங்கிய பிரச்சாரம் மார்க்கெட், சாலை தெரு, சோலை நகர், அங்காளம்மன் நகர், வஉசி நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்ற டி.வி நகரில் முடித்தார். 

முன்னதாக இருசக்கர மோட்டார் வாகனத்தில் முத்தியால் பேட்டை மணிக் கூண்டு பகுதியில் இருந்து துவங்கி தொகுதி முழுவதும் ஊர்வலமாகச் சென்று சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தனர்.இந்தப் பிரச்சாரத்தில் மத்தியக் குழு உறுப்பினர் சுதா, பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், மூத்த தலைவர் தா.முருகன், நகரச் செயலாளர் மதிவாணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ராமச்சந்திரன், ராமசாமி, பிரபு, தமிழ்ச்செல்வன், சத்தியா உள்ளிட்ட திரளானோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

;