election-2019

பணத்தோடு மையும் - இது பாஜகவின் புது ஸ்டைல்

உத்தரபிரதேசத்தில் ரூ500 பணத்தோடு கையில் மையையும் வைத்து விட்டு மக்களின் வாக்கை நாங்களே போட்டுக்கொள்வோம் என்று பாஜக மிரட்டியது குறித்து பொதுமக்கள் புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாடு முழுவதும் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8 மாநிலங்களின் 59 மக்களவை தொகுதிகள் அடங்கும். மேலும் தமிழகத்தில் 4, கோவா 1, கர்நாடகா 1 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும் தொடங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 13 மக்களவை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் சந்தவுளி அடுத்த தாரா ஜீவன்பூர் கிராமத்திற்கு நேற்று பாஜகவை சேர்ந்த மூன்று பேர், சென்றுள்ளனர். அவர்கள் கிராம மக்களை மிரட்டி வலுக்கட்டாயமாக கிராம மக்களின் விரல்களில் மை வைத்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு ரூ.500 கொடுத்துவிட்டு, ”இனி நீங்கள் வாக்களிக்க முடியாது. வாக்குச்சாவடிக்கு யாரும் வரக்கூடாது என்று மிரட்டி உள்ளனர். உங்கள் வாக்கை நாங்கள் பதிவு செய்துவிடுகிறோம். இதை யாரிடமும் சொல்லாதீர்கள்” என்று கட்டாயப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அந்த கிராம மக்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். 

இதுபற்றி தகவலறிந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யட்டும். இதில் உரிய விசாரணை நடத்தப்படும். இன்னும் தேர்தல் தொடங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு தரப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதாவது, இன்று காலை தேர்தல் தொடங்குவதற்கு முன்பே கிராம மக்கள் புகார் அளிக்கச் சென்றது குறிப்பிடத்தக்கது.