election-2019

img

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மீண்டும் மீண்டும் மீறும் மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சீத்தாராம் யெச்சூரி கடிதம்


புதுதில்லி, மே 13-

பாலக்கோட்டில் மேகமூட்டம் இருந்ததால் பாகிஸ்தானின் ராணுவ ரேடார்களால் நம் விமானங்கள் பறந்துவருவதைக் கண்டுபிடிக்க முடியாது என்று கூறி நம் ஆகாயவிமானங்கள் தாக்குதல் தொடுத்திட உத்தரவு பிறப்பித்தேன் என்று ஒருதொலைக்காட்சி அலைவரிசைக்கு மோடி பேட்டியளித்திருப்பதன் மூலம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து அவர் மீறி வருகிறார் என்றும், தேர்தல் ஆணையம் இப்போதாவது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஞாயிறு அன்று தேர்தல் ஆணையத்தை சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.

தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் நம் விமானப்படையினர் எவ்வாறெல்லாம் தாக்குதல் தொடுத்தார்கள் என்று விவரமான முறையில் பேட்டியளித்துள்ளார். ஆறாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் முடிவடைந்துள்ள நிலையில், இனி பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் நடத்தக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ள சமயத்தில் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் இவ்வாறு மோடி பேட்டி கொடுத்திருப்பது என்பது வாக்காளர்களின் மீது செல்வாக்கு செலுத்துவதற்காகவேயாகும். இதன்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.

நம் நாட்டின் இராணுவத்தினரின் நடவடிக்கையை, நம் அனைவருக்கும் சொந்தமான நம் ராணுவத்தினரின் நடவடிக்கையை, எந்தவொரு கட்சியும் தனிப்பட்ட முறையில் தங்களுக்குச் சொந்தம் கொண்டாடமுடியாது என்று சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தொலைக்காட்சி அலைவரிசைக்கு சனிக்கிழமையன்று வெளியாகியுள்ள நேர்காணலில் மோடி, இந்திய விமானப்படை எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் தொடுத்திட தான் அனுமதித்ததாகக் கூறியுள்ளார். அந்த சமயத்தில் வான்மேகங்கள் அதிகமாக இருந்ததால் அவை விமானங்களை மறைத்துக்கொள்ளும் என்றும் எனவே பாகிஸ்தான் ரேடார்களால் அதனைப் பார்க்கமுடியாது என்றும் மிகவும் அபத்தமான முறையில் பேட்டி அளித்திருந்தார். 

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள காலத்தில் மோடி இத்தகைய பேட்டியை அளித்திருப்பதை தேர்தல் ஆணையம் பதிவு செய்துகொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இதேபோன்று பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய எண்ணற்ற நிகழ்வுகளை தேர்தல்ஆணையத்தின் முன் இதற்கு முன்பு நான் கொண்டுவந்திருந்தபோதிலும், தேர்தல் ஆணையமானது அவர்களிருவரும் தேர்தல்விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை போல் தோன்றுகிறது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய அணுகுமுறையை கார்ட்டூனிஸ்ட்டுகள், பல செய்தியேடுகளின் தலையங்கங்கள் மற்றும் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். அவர்கள் கூறியதெல்லாம் தவறு என்று மெய்ப்பிப்பதுபோன்று இப்போதாவது தேர்தல் ஆணையம் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சீத்தாராம் யெச்சூரி தன் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரின் தொலைக்காட்சி அலைவரிசையில் வந்துள்ள பேட்டி தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்டி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “பாலக்கோட் தாக்குதல் படுதோல்வி அடைந்த ஒன்று என்பதில் எவ்வித ரகசியமும் இல்லை. இதற்குக்காரணம் பிரதமர் மோடி, இந்திய விமானப்படையினரின் அறிவுரையைக் கேட்க மறுத்ததுதான் காரணமா? மேக மூட்டம் இருந்ததால் தாக்குதல் தொடுக்க ஆணையிட்டேன் என்கிற மோடியின் பேட்டி மிகவும் சங்கடத்தை உண்டாக்குகிறது.”

இதேபோன்று மோடியன் பேட்டியை தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவரான உமர் அப்துல்லாவும் கிண்டலடித்துள்ளார்.

(ந.நி.)