education

img

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழ்நாட்டில் நடந்து வரும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகப்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

பின்னர் வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர்,

இந்தாண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், இந்த வருடம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரமாகக் குறைந்துள்ளது. ஒரு பள்ளியில் 1 அல்லது 2 மாணவர்கள்தான் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு உயர் அலுவலர்களும் முயற்சி எடுத்தனர்.

கொரோனா காலத்தில் குழந்தைகள் பள்ளிக்கு வராத நிலையிலும், அதன் பிறகும் கல்வியில் ஆர்வம் செலுத்தாத குழந்தைகளுக்கும் சேர்த்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. கல்வி முறையிலிருந்து குழந்தைகள் வெளியில் சென்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பள்ளிக்குச் சரியாக வராத மாணவர்களையும், தேர்வுக்கு முந்தைய ஒரு மாத காலத்தில் தயார்ப்படுத்தினோம். அதையும் புரிந்து கொண்டு சில மாணவர்கள் தேர்வு எழுதினர். இருப்பினும் சில மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. அந்த நிலைமை மீண்டும் வந்துவிடக்கூடாது எனக் கருத்தில் கொண்டு இந்தாண்டு முயற்சி எடுத்து கணிசமான அளவுக்குக் குறைத்துள்ளோம். வருங்காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின்  திட்டங்களைக் கூறி மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை மார்ச் 1 ஆம் தேதியே தொடங்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் இதுவரை 25 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கன்வாடிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3.30 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடியில் இருக்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் முழுமையாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை கடத்தல் என வரக்கூடிய வதந்திகள் உண்மையாகிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

;