districts

ஜாக்டோ - ஜியோ மாநாட்டில் பங்கேற்று திரும்பிய போது விபத்து: 11 பேர் காயம் பெரம்பலூர் எம்எல்ஏ ஆறுதல்

பெரம்பலூர், செப்.13 - சென்னை தீவு திடலில் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ மாநாட்டில் கலந்து கொண்டு மதுரைக்கு திரும்பி செல்லும் வழியில் செப்.11 அன்று காலை, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதி சின்னாறு கருமாரியம்மன் கோவில் அருகே விபத்து நிகழ்ந்தது.  இதில் காயமடைந்த 11 ஆசிரியர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.  சென்னையில் இருந்து மதுரை மாவட்டம் வு.கல்லுப்பட்டி பகுதிக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த முனியாண்டி (44), முருகேசன் (56), மாயகிருஷ்ணன் (54), தாமரைச்செல்வி (43), முத்துச்சாமி (54), ஆதிமுருகன் (48), சுந்தர்ராஜ் (49), வேலு (57), அவ்வையார் (49), பெரிய கருப்பன் (56), முத்துலட்சுமி (57) ஆகிய அனைவரும் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில், சுகாதாரத் துறையின் மூலமாக அவர்களுக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் உடல் நலன் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்த பின்னர், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  சிபிஎம் நிர்வாகிகள் மருத்துவர் சி.கருணாகரன், கவிஞர் எட்வின், ரெங்கநாதன், கோகுலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் உடனிருந்தனர்.

;