districts

img

மயிலாடும்பாறை அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிப்பு

கடமலைக்குண்டு, மே 4- தேனி மாவட்டம்  மயிலாடும்பாறை  அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே உள்ள மீன் பாறை குட்டத்தை ஒட்டிய வடக்குப் பகுதியில் பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு ஆலையை, கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான மூ.செல்வம் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: மயிலாடும்பாறை அருகே வைகை ஆறு தொடங்கி மீன் பாறை கூட்டம் முடியும் பொன்னம்படுகை சாலை வரை சங்கிலியாண்டி, சரவணன், சென்றாயன் ஆகியோர்களுக்குச் சொந்தமான சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் இரும்பு கசடுகளும் உருக்கப்பட்ட இரும்புகளும் நிரம்பிக் கிடக்கின்றன.

மூல வைகைப் பகுதியில் பல இடங்களில் இரும்புக் கசடுகள் கிடைத்தாலும் கூட, பெரிய அளவில் இரும்பு உருக்கு ஆலைகள் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் இதுவே முதல் முறை.

இரும்பை உருக்க உலைகள் அமைத்து செம்பிரங்கல் போன்ற கல்லாலான மூலப் பொருள்களில் இருந்து இரும்பை பிரித்தெடுத்திருப்பது தெரிய வருகிறது. அவைகளை உலைகள் மூலம் கொதி நிலைக்குக் கொண்டு வந்து, கற்களில் இருந்து இரும்பை பிரித்தெடுத்து இருக்கின்றனர். அப்படியான குவியல்கள் இரும்புக் கழிவு குவியல்களாக இங்கு கிடைக்கின்றன.

சுடு மண்ணால் ஆன குழாய்கள் சிதைவுற்ற நிலையில் குவியலாக இப்பகுதியில் பல இடங்களில் கிடைக்கின்றன. இவை உலை அமைப்புகளை எரியூட்டுவதற்காக துருத்தி போல தூரத்திலிருந்து காற்றைச் செலுத்த பயன்படுத்தி இருக்கின்றனர். மேலும், இரும்பை உருக்கி கம்பி வடிவமாக கருவிகள் செய்வதற்கும் குழாய் அமைப்பை பயன்படுத்தி இருக்கலாம்.

பழங்காலத்தில் இரும்புத் தொழில்நுட்ப  அறிவு 

பழங்கால தமிழ் மக்கள் இரும்புத் தொழில்நுட்பம் பற்றிய அறிவும், திறமையும் பெற்றிருந்தனர். இரும்பை உலையில் இருந்து பிரித்தெடுத்தபின் கத்தி, ஈட்டி, கோடாரி, வேல், எடை கற்கள் உள்ளிட்ட தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பல பொருள்களை தயாரித்துள்ளனர்.

இங்கு தயாரிக்கப்பட்ட இரும்புப் பொருள்கள் வருசநாட்டுப் பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ததோடு பிற பகுதிகளுக்கும், நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருப்பதை அறியமுடிகிறது. புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்காலங்களில் குடியிருப்பு பகுதியாகவும் மயானமாகவும் இப்பகுதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் பயன்பாட்டில் இருந்த செர்ட் வகை நுண்கற்கருவிகள் ரெளலட்டட், அரிட்டைன் வகை மண் ஓடுகள், அரவை கற்கள், முதுமக்கள் தாழி போன்றவை அதிக அளவில் கிடைக்கின்றன.

பெருங்கற்கால நினைவுச் சின்னங்களான கல்திட்டை, கல்பதுக்கை, கற்குவை நிரம்ப  இருந்ததால், இப்பகுதியை பிரமிடு தோட்டம் என்ற பெயரில் மக்களும் நில உரிமையாளர்களும் அழைக்கின்றனர்.

நூற்றுக்கணக்கான பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் முழுமையாக சிதைக்கப்பட்டுள்ளன. கற்பலகைகள் எச்சங்களாக ஆங்காங்கே வரப்புகளில் குவிக்கப்பட்டுள்ளன. முற்கால பாண்டியர்கள் காலத்தில் ஒரோமில் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இன்றைய மயிலாடும்பாறை தொல்பழங்காலத்திலிருந்து தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வருவதை பல்வேறு தொல்லியல் சான்றுகளைக் கொண்டு நிறுவமுடியும். இதை, வைகை நதி நாகரிகத்தின் தனித்துவம் என்றே கூற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;