districts

திருக்கோவில்களில் முடி இறக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, செப்.19 - ஐ.நா. சபையில் உலக முடித் திருத்துவோர் தினமாக அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 16 ஆம் தேதியை தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் சங்க ஸ்ரீரங்கம் மாநகர சங்கம் சார்பில் ஸ்ரீரங்கத்தில் கொண்டாடினர். விழாவிற்கு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து சங்க கொடியை ஏற்றினார்.   துணைத் தலைவர் சுரேஷ் வரவேற்றார். செயலாளர் ராஜலிங்கம், இளைஞர் அணி செயலாளர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். மருத்துவர் சமூக மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். திருக்கோவிலில் முடி இறக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். முடி திருத்தும் கடைகளுக்கு மின்சாரத்தை அரசு மானியமாக வழங்கிட வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ்  தபால் தலை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;