பேராவூரணி, டிச.18 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து அறந்தாங்கிக்கு இரவு 9.20 மணிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து நகர பேருந்து மற்றும் புறநகர் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தன. கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் பொதுமக்களின் வருகை இல்லாததால் சில பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட அறந்தாங்கி செல்லும் 9 ஆம் எண் பேருந்து இரவு நேரத்தில் மீண்டும் இயக்கப்படாததால் பேராவூரணி பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வியாபாரிகள், பொதுமக்கள் ஊர் திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். இரவு 9:20-க்கு பேராவூரணியில் இருந்து புறப்பட்டு அறந்தாங்கிக்கு 10.15 மணிக்கு செல்லும் இரவு பேருந்தை பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு மருத்துவம் மற்றும் பொருட்கள் கொள்முதலுக்காக செல்லும் வியாபாரிகள் நம்பியிருந்தனர். பேருந்து நிறுத்தப்பட்டதால் வாடகை கார் எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இல்லாவிட்டால் இரவு முழுவதும் அறந்தாங்கி பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் நிலையும் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பேராவூரணியில் நடைபெறும் சந்தை வியாபாரத்திற்கு அறந்தாங்கி பகுதியில் உள்ள பல்வேறு ஊர்களிலிருந்து வரும் வியாபாரிகள் வியாபாரம் முடித்துவிட்டு, இரவு ஊர் செல்ல முடியாமல் உள்ளனர். பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து இயக்கப்பட்டு, நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகளையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பேராவூரணி - அறந்தாங்கி இடையே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட 9 ஆம் எண் நகரப் பேருந்தை உடனடியாக இயக்க வேண்டும் என சிபிஎம் ஒன்றியச் செயலாளர் (பொ) வே.ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.