districts

img

வாடகை பாக்கி கடைகளுக்கு சீல்: தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம்,ஜன.25- செஞ்சி அருகே வாடகை செலுத்தாதவர்களின் கடைகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டத்திற்குட்பட்டது பனைமலை. இங்குள்ள உமையாள்புரம் தாளகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் கடைகளும் வைத்திருக்கிறார்கள். இதில் கோவிலுக்கு சிலர் வாடகை கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாடகை கொடுக்காமல் இருந்தவர்களின் கடைகளில் இருந்த பொருட்களை காலி செய்து, சீல் வைப்பதற்காக இந்து சமய அறநிலைத்துறையினர் சென்றனர்.  அப்போது ஒன்று திரண்ட வியாபாரிகள் மற்றும் வாடகை குடியிருப்போரும் அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பெண் ஒருவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்தவர்களும் காவலர்களும் தடுத்து நிறுத்தினார். பிறகு, இந்த பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.  அதனைத் தொடர்ந்து, அனந்தபுரம் காவல் நிலையத்தில் அமைதி பேச்சு நடந்தது. தற்போது குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்துவதாகவும் மீதுமுள்ள தொகைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வாடகைதாரர்கள் கோரிக்கை வைத்தனர். இதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து, சீல் வைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதையடுத்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

;