சென்னை, ஏப்.4– கடுமையான நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்ட 53 வயது பெண்ணுக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் அவர் உயிர்பிழைத்தார். இது குறித்து ரேலா மருத்துவமனையின் உள் மருத்துவ பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் ஜிம்மி பிரபாகரன் கூறுகையில், நோயாளி கண்ணம்மாள் மிகவும் எடை குறைந்த நிலையில் காணப்பட்டார். அவரால் எந்த உணவையும் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டார். அவரது கீழ் மூட்டுகளில் அதிகப்படியான வீக்கம் இருந்தது மற்றும் முற்றிலும் அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதும் தெரிய வந்தது. அத்துடன் அவருக்கு கடுமை யான வயிற்று வலியும் இருந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு அவருக்கு கடுமையான புரத கலோரி ஊட்டச் சத்துக் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தது. அவர் சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மூச்சுக்குழாய் பரிசோதனைக்குப் பிறகு, அவரது நுரையீரல் முழுவதும் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது என்றும் டாக்டர் ஜிம்மி தெரிவித்தார். அவருக்கு அளிக்கப்பட்ட காசநோய் சிகிச்சை குறித்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் பென்ஹூர் ஜோயல் கூறுகை யில், வெற்றிகரமாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அந்த பெண்ணின் உடல் எடை தற்போது 54 கிலோவாக உள்ளது. அவர் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார். மேலும் ரத்த சோகைக்கான அறிகுறிகள் எதுவும் அவருக்கு இல்லை. தற்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலம் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனை களையும் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வது அவசியம் என்றார்.