புதுதில்லி, டிச. 4- தஞ்சாவூருக்கும், சென்னைக்கும் இடையே சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் உட்பட அதிக அளவில் ரயில் போக்குவரத்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் அஇஅதிமுக உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் கோரினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் ஆர். வைத்திலிங்கம் பேசியதாவது: தஞ்சாவூர், தமிழ்நாட்டில் காவிரிப் பாசனப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் தொன்மையான நகரமாகும். இந்நகரத்தில், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற பெரிய கோவில் என்னும் பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது உலகப் பாரம் பரியச் சின்னங்களில் ஒன்றாகும். மேலும் தஞ்சை மாவட்டத்தில் நாட்டின் பல பகுதிகளி லிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்ற நவக்கிரக கோவிலும் உள்ளது. தஞ்சாவூரில் ஒரு ரயில் சந்திப்பு நிலை யம் இருக்கிறது. இது 1881இல் உருவானது. எனினும் இந்த ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படுவது மிகவும் குறைவு. இது இங்கே வாழும் உள்ளூர் மக்களுக்கும் இந்நகரத்திற்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது. எனவே, தஞ்சாவூரிலிருந்து அடிக்கடி போய்வரக்கூடிய விதத்தில் சென்னைக்கு பிரத்யேகமாக சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விட வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் இந்நகருக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் நெரிசலைச் சமாளித்திட முடியும். அதேபோன்று தஞ்சையிலிருந்து திருச்சி, மதுரை, பட்டுக்கோட்டை, திருவாரூர் போன்ற நகரங்களுக்கும் ரயில் போக்கு வரத்தை அதிகரித்து, சுற்றுலாப்பயணிகளும், உள்ளூர் மக்களும் பயனடையச் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆர். வைத்திலிங்கம் கோரினார். (ந.நி.)