districts

img

மேட்டுப்பாளையம் பவானியாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூன்று கல்லூரி மாணவர்களை தேடும் பணி தீவிரம்.

மேட்டுப்பாளையம் பவானியாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூன்று கல்லூரி மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்..

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மாம்பட்டி என்னுமிடத்தில் பவானியாற்றில்  குளிக்க சென்ற மூன்று கல்லூரி மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இவர்களை தேடும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வருபவர்கள் சுரேந்திரன், ராஜதுரை,  (இவர்கள் இருவரும் கோவையை சேர்ந்தவர்கள்) மற்றும் கனீஷ்க் (இவர் சென்னையை சேர்ந்தவர்)..இவர்கள் மூவரும் தங்களுடன் கல்லூரியில் பயிலும் சக மாணவர்கள் ஏழு பேருடன் இணைந்து மொத்தம் பத்து பேராக விடுமுறை தினமான இன்று கோவையில் இருந்து கிளம்பி மேட்டுப்பாளையம் வந்துள்ளனர்..

பின்னர் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மாம்பட்டி என்னுமிடத்திற்கு சென்ற மாணவர்கள் அனைவரும் அங்கிருந்த பவானியாற்றில் இறங்கி குளித்ததோடு ஆற்றின் மறுகரைக்கும் செல்ல முற்பட்டுள்ளனர்..அப்போது ஆற்றின் வேகம் திடீரென அதிகரிக்கவே சுரேந்திரன், ராஜதுரை, கனீஷ்க் ஆகியோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்..உடன் வந்த மாணவர்களின்  கூக்குரலை கேட்ட மாம்பட்டி கிராமத்தினர் இது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்..

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் பரிசல்கள் உதவியோடு மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..ஆற்றின் ஆழமான பகுதிகளில் கயிறுகளில் இரும்பு கொக்கிகளை வீசி யும் தேடி வருகின்றனர்..இதனிடையே ஆற்றின் மறுகரையில் சிக்கி கொண்ட மீதமுள்ள ஏழு மாணவர்கள் பரிசல்கள் மூலம் பத்திரமாக இக்கரைக்கு அழைத்து வரப்பட்டனர்..கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்களை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது..