districts

img

சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான பணிகள் தேக்கம்

கோவை, ஏப். 27- சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான பணிகள் நாற்பது சதவிகிதம் அளவிற்கு தேக்கம் அடைந்துள்ளதாக கட்டுநர் வல்லுநர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் சனியன்று கோவை மாவட்ட கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் தலைவர் சிவராஜன் கூறுகையில், மத்திய அரசு ஒப்பந்த பணிகளுக்கு 18 சதவிகிதமாக இருந்த ஜிஎஸ்டியை 12 சதவிகிதமாக ஆக குறைத்துள்ளனர். இதனை நான்கு சதவிகிதமாக குறைக்கப்பட்டால் மட்டுமே கட்டுமான தொழில் வளர்ச்சி அடையும். பெரும்பாலான கட்டுமான பணிகளுக்கான உரிமம் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கப்படுகின்றன. இதனால் உரிமம் பெற காலதாமதமாகிறது. ஒற்றை சாளர முறையில் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும் பட்சத்தில் எளிதாகும் என்றார்.மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தங்களையும் இணைத்து திட்டத்தை பரவலாக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சிமெண்ட் விலை உயர்வால் நாற்பது சதவிகித கட்டுமான பணிகள் தேக்கம் அடைந்துள்ளது. அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த சிமெண்ட் பத்து சதவிகிதம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதுபோதுமானதாக இல்லை. தேவைக்கேற்ப அரசு சிமெண்ட் வழங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், தற்போது எம்.சாண்ட் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மூன்றில் ஒரு பங்கு விலை குறைவாக உள்ளது. இருப்பினும் இது குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றனர்.முன்னதாக, இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, சங்க துணை தலைவர் பன்னீர்செல்வம்,செயலாளர் சரவணன்,பொருளாளர் லட்சுமணன்,இணை செயலாளர் கணேஷ்குமார் மற்றும் சின்னசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

;