districts

img

சிலைக் கடத்தல் வழக்கில் பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது  

ராமநாதபுரத்தில் சாமி சிலைகளை கடத்தி விற்பனையில் ஈடுபட முயன்ற பாஜக நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  

ராமநாதபுரம் மாவட்டம் பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளரான முதுகுளத்துாரை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர். இவர் சட்ட விரோதமாக தொன்மை வாய்ந்த சுவாமி சிலைகளை விற்க முயற்சி செய்வதாக, மதுரை சிலை தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  

இதனையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவுப்படி, மதுரை சிலை தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பின் தனிப்படையினர் பாஜக நிர்வாகியான அலெக்ஸ்சாண்டரை இன்று காலை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அலெக்ஸ்சாண்டரிடம் 7 சிலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அதனைதொடர்ந்து நடத்திய விசாரணையில், அருப்புக்கோட்டை காவல்நிலைய காவலரான இளங்குமரன் மற்றும் விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி ஆகிய இருவரும் தன்னிடம் சிலையை விற்பனை செய்வதற்காக கொடுத்தாக கூறியுள்ளார். அவர் அளித்த தகவலின்படி காவலர் இளங்குமரன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இளங்குமரன் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி தற்போது சஸ்பெண்ட் ஆகி உள்ளார். நாகநரேந்திரன் திண்டுக்கல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.   கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இளங்குமரன், நாகேந்திரன் ஆகியோரும் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஒரு மலை அடிவாரத்தின் அருகில் உள்ள கிராமத்தில் சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக தகவல் கிடைத்து. அங்கு சென்று தாங்கள் சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் என்று கூறி மிரட்டி அவர்களிடமிருந்து 7 சாமி சிலைகளை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.  

கடத்திய சிலைகளை அலெக்ஸ்சாண்டரிடம் கொடுத்து கோடிக்கணக்கில் விற்று தரும்படி கூறியது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து அலெக்ஸ்சாண்டர் யாருக்கும் தெரியாமல் 7 சிலைகளையும் சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கு விற்க முயற்சித்து வந்துள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதனைதொடர்ந்து அவர்களிடமிருந்த 2 நடராஜர் சிலைகள், நாக கன்னி, காளி, முருகன், விநாயகர், நாக தேவதை ஆகிய 7 சிலைகளை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.    

சிலைகடத்தலில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளரான அலெக்ஸ்சாண்டர், காவலர்களான அருப்புக்கோட்டையை சேர்ந்த இளங்குமரன், திண்டுக்கல்லை சேர்ந்த ஆயுதப்படை காவலரான நாகநரேந்திரன், விருதுநகர் கூரைக்குண்டு பகுதியை சேர்ந்த கருப்பசாமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  

மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜேஷ் மற்றும் விருதுநகரை சேர்ந்த கணேசன் ஆகிய இருவரும் தலைமறைவான நிலையில் தனிப்படை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இதனிடையே கைப்பற்றப்பட்ட சிலைகள் எந்த கோவிலை சேர்ந்தது என்பது குறித்தும் அவற்றின் தொன்மைத்தன்மை குறித்தும் மதுரை மாவட்ட சிலை திருட்டு தடுப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

;