districts

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு பேரா. நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை

விருதுநகர், ஏப். 30 - மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்ற அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு, விருதுநகர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 2 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

இந்த வழக்கில், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் திங்களன்று (ஏப்ரல் 29) தீர்ப்பு வழங்கினார். அப்போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளி களான உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர்  மீது தகுந்த ஆதாரங்கள் மற்றும் சாட்சி யங்கள் இல்லை என்று கூறி அவர்களை விடுவித்தார். நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்தார். 

எனினும், சில ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கால அவகாசம் வேண்டுமென நிர்மலா தேவியின் வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று தண்டனை விவரங்களை ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதனடிப்படையில், செவ்வாயன்று மாலை நீதிபதி பகவதியம்மாள் அளித்த தீர்ப்பில், நிர்மலா தேவிக்கு 370 (1) பிரிவில் 7 ஆண்டு சிறை, ரூ. 5 ஆயிரம்; அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை; 370 (3) பிரிவில் 10 வருடம் சிறை, ரூ. 25 ஆயிரம் அபராதம்; அபராதத்தைக் கட்டத் தவறினால் கூடுதலாக 1 வருடம் சிறை; 5 (1) பிரிவில் 5 வருடம் சிறை, ரூ. 2 ஆயிரம் அபராதம்; அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும், 3 மாதம் சிறை, பிரிவு 9-இன்படி 10 வருடம் சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம்; கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை; பிரிவு 67-இன்  படி 3 வருடம் சிறை, ரூ. 2 லட்சம் அபராதம்; அப ராதத்தைத் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை என்று அறிவித்தார்.

மொத்தமாக பார்த்தால் 35 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் ஆகும். எனினும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. வழங்கப்பட்ட தண்டனையில் எது உச்ச பட்ச தண்டனையோ அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

இதன்படி, 10 ஆண்டு சிறைத் தண்டனை யுடன், ரூ. 2 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.