districts

img

பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

மயிலாடுதுறை, ஜூலை 17 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றமைக்காக தில்லையாடி அருணாச்சலக்கவிராயர் இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு தில்லையாடி அருணாசலக்கவிராயர் இயல் இசை நாடக மன்றத்தின் நிறுவனர் நா.வீராசாமி, தலைவர் பாவலர் சு.ராசமாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். 

பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார்.

முன்னதாக தில்லையாடியில் உள்ள தமிழிசை மூவருள் ஒருவரான அருணாச்சலக்கவிராயர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.