districts

img

பருத்தி மேனி குப்பம் கிராமத்தில் சுடுகாடு வசதி செய்து தரக் கோரிக்கை

பெரியபாளையம், டிச. 4- திருவள்ளூர் மாவட்டம் எல்லா புரம் ஒன்றியம் தும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பருத்தி மேனி குப்பம் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன.  இந்த கிராம மக்களுக்கு என்று தனியாக சுடுகாடு இல்லை. இங்கு வசிப்பவர்கள் யாராவது இறந்து போனால் ஆரணி ஆற்றைக் கடந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்து வருகின்ற னர். ஆரணி ஆற்றில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அந்த காலகட்டங்களில் யாராவது இறந்து போனால் உயிரை பணயம் வைத்து ஆற்றுநீரை கடந்து சென்று இறந்தவர்களின் உடலை கிராம மக்கள் அடக்கம் செய்து வரு கின்றனர். இங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு ஒன்று அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வட்டாட்சியர், மாவட்ட நிர்வாகம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (டிச. 2) இக்கிராமத்தைச் சேர்ந்த மோகனா (55) என்பவர் இறந்து போனார். இதனால் பருத்தி மேனி குப்பம் கிராம மக்கள் அவரது உடலை இடுப்பு அளவு தண்ணீரில் ஆரணி ஆற்றை கடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் அடக்கம் செய்தனர். எனவே அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக  சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.