திருவண்ணாமலை, பிப். 2- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றிய அலுவலகத்தில் 119 டிபிசி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். இதில் பட்டதாரிகள், இடைநிலை வகுப்பு பயின்றவர்கள் உள்ளனர். இவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி இடையூறின்றி கொரானா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தும் முன் களப்பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் திட்டம் தொடர்கிறது. அதே ஊழியர்களே இந்த திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். மலேரியா, காலரா, மற்றும் டெங்கு நோய் தொற்றுகள் பரவல் தடுத்தல், மருத்துவ சிகிச்சை அளித்தல், மருந்து தெளித்தல், முகாம்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளுதல், தொற்றால் இறப்பவர்களை அடக்கம் செய்தல் உள்ளிட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த பணியாளர்கள் திடீரென பிப்ரவரி 1 முதல் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் பணி ஆணை வழங்கி வந்த நிலையில், செங்கம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பத்தின்படி, டிபிசி பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இது திட்டத்தையும், திட்ட அமலாக்கத்தையும் சீர்குலைப்பதாகும். எனவே, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி உத்தரவு வழங்க வேண்டும் என மாவட்ட கொசு ஒழிப்பு பணியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கணபதி, சிஐடியு நிர்வாகிகள் பாரி, எம்.வீரபத்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.