திருச்சிராப்பள்ளி, மார்ச் 12- தூய்மைப்பணியை தனியாருக்கு தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர். ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:- திருச்சிராப்பள்ளி நகராட்சி (8.7.1866) ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பாரம்பரிய நகரம். பின்னர் 1.6.1994- ஆம் ஆண்டு பொன்மலை நகராட்சி, அரியமங்கலம் , அபிஷேகபுரம், திருவெறும்பூர் உள்ளிட்ட சில பேருராட்சிகள், பல ஊராட்சிகளை இனைத்து மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. சென்னை, கோயம்புத்தூரைத் தொடர்ந்து (167. 23 ச.கி.மீ.,) மூன்றாவது மாநகராட்சி திருச்சிராப்பள்ளி. தற்போது மேலும் பல பகுதிகளை இணைத்து 100- வார்டுகளைக் கொண்ட பெரும் மாநகராட்சியாக உருவாகி வருகிறது. இந்தநிலையில் மாநகராட்சியில் 64-வார்டுகளில் மார்ச் 24-ஆம் தேதி முதல் ஒப்பந்த அடிப்படையில் குப்பைகளை அகற்றல், தூய்மைப்பணி இரண்டையும் முழுக்க, முழுக்க தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இது ஒன்றிய அரசு கடைபிடித்து வரும் தனியார்மய, தாராளமய கொள்கைகளை அப்படியே தமிழக அரசு பின்பற்றப் போவதாகவே தெரிகிறது. நிரந்தரப் பணியிடத்தில், (குடிநீர், மின்சாரம், குப்பை அள்ளுதல் )ஒப்பந்த முறை மற்றும் ஒப்பந்தத் தொழிலாளி இருக்கக் கூடாது என்ற ஒப்பந்தத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1970-க்கு புறம்பாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தனியாரிடம் தூய்மைப்பணியை ஒப்படைப்பது சட்டத்திற்குப் புறம்பானது. தனியார் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் இந்தியாவில் பல நகரங்களில் ஊழல் முறைகேடுகளில் தான் முடிந்துள்ளது.
உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு போனிக்ஸ் என்ற சிங்கப்பூர் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அப்போது மாநகராட்சி அதிகாரிகள் சிலர் போனிக்ஸ் நிறுவனத்தோடு கைகோர்த்து முறைகேடுகளில் ஈடுபட்டு தூய்மைப்பணி செய்வதில் பெரும் குளறுபடி ஏற்பட்டதை தமிழகம் அறியும். திருச்சிராப்பள்ளி மாநகரின் மக்கள் தொகை 10 லட்சத்து 45 ஆயிரத்து 436. லட்சத்து 6 லட்சத்து 73 ஆயிரத்து 538 வீடுகள், 15, 600 வணிக நிறுவனங்கள், 10 400 பெரும் வணிக நிறுவனங்கள் உள்ளது மாநகராட்சியின் டெண்டர் படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர 1291.60 கி.மீ., தெருக்கள் 126.54 கி.மீ. சாலைகள் உள்ளன . இப்பணியை தற்போது 1,700 சுய உதவிக் குழு தொழிலாளர்கள் (90 சதவீதம் பெண்கள்) தினக்கூலி அடிப்படையிலும், 800 மாநகராட்சி நிரந்தரத் என மொத்தம் 2,500 பேர் மூலம் தூய்மைப் பணி நடக்கிறது. 1,180 துப்புரவுத் தொழிலாளர்கள்- 251 ஓட்டுநர்கள் மூலம் தினமும் வீடு, வணிக நிறுவனங்களில் குப்பைகள் சேமிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. 83,138 வீடுகளில் பேட்டரி வண்டிகள் மூலம் 437 தொழிலாளர்கள் வீடு வீடாக தினமும் குப்பைகளை வாங்க வேண்டும். அதாவது ஒரு தொழிலாளிக்கு 190 வீடுகள். இலகு ரக வாகனங்கள் மூலம் 1,64.400 வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை 649 தொழிலாளர்கள் பெற வேண்டும். சராசரியாக ஒரு தொழிலாளி தொழிலாளி 253 வீடுகளுக்குச் செல்ல வேண்டும். 10,400 பெரும் வணிக நிறுவனங்களில் 27 தொழிலாளர்கள் மட்டுமே தினமும் குப்பை பெற வேண்டும் என்ற சூழலில் ஒரு தொழிலாளி 385 நிறுவனங்களுக்குச் சென்று குப்பைகளைப் பெற வேண்டும். 15,600 வணிக வளாகங்களில் 67 தொழிலாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து குப்பை எடுக்க வேண்டும். சராசரியாக ஒரு தொழிலாளி 232 நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டும். 1,291.60 கி.மீ., தெருக்கள் 126.5 கி.மீ., சாலைகளைக் கூட்டுவதற்கும், சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கு எங்கு எத்தனை தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள் என்பது குறித்து எந்தத் திட்டமும் இல்லை. குப்பைக் பிரிக்கும் கம்போஸ்டுகளில் எத்தனை பேர் பணியாற்றுவார்கள் என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை.
டெண்டர் விதிமுறைகளின் படி மாநகராட்சி தீர்மானித்துள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கையை வைத்து தினமும் 24 மணி நேரம் வேலை செய்தாலும் கூட மேற்கண்ட தூய்மைப்பணிகளை செய்து முடிப்பது சாத்தியமில்லாதது. ஈவு இரக்கமற்ற முறையில் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலைப் பளுவைத் திணிக்கும் நிலை தான் ஏற்படும். 25 வயது முதல் 50 வயது வரையிலான தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றுவார்கள் என்று டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பணியிலுள்ள 1700 சுய உதவிக் குழு தூய்மைப் பணியாளர்களில் நூற்றுக்கணக்கானோர் 50 வயதைக் கடந்தவர்கள். அவர்களின் பணிப் பாதுகாப்பு குறித்து எந்த விவரமும் இல்லை. பெறும் ஊழல் முறைகேட்டிற்கு வழிவகுக்கும்- மாநகர் மக்களின் சுகாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் துப்புரவுப் பணியை தனியாருக்குக் கொடுப்பதைக் கைவிட்டு கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து நிரந்தரப் பணியில் புதிய வேலை வாய்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இலட்சினையில் “எங்கள் பணி தங்களுக்கே” என குறிப்பிடப்பட்டுள்ளது. இனி “எங்கள் பணி தனியாருக்கே” என மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள். தூய்மைப் பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்து மாநகராட்சி முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.