தஞ்சாவூர், அக்.18 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கொரட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால், அப்பகுதியில் பெண்கள், குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நடமாட முடியாத நிலை உள்ளது. மேலும், விளை நிலங்களில் மது பாட்டில்களை வீசிச் செல்வதால், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொரட்டூர் கிராம மக்கள் சார்பில் வியாழக்கிழமை காலை முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானை மற்றும் டாஸ்மாக் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படாததால் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தெய்வானை தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர், டாஸ்மாக் மேலாளர், பேராவூரணி காவல் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அரசுத் தரப்பில் கலந்து கொண்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, நிர்வாகிகள் ஜெயந்தி, மேரி, சரோஜா, மேனகா, எஸ்தர் ஜெயலீமா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், நிர்வாகிகள் வீ.கருப்பையா, ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார், கொரட்டூர் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், வரும் நவம்பர் 20 ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடை நிரந்தரமாக அகற்றப்படும் என உறுதியளித்தனர். இதையேற்று காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.