districts

img

கருப்பத்தூர், கள்ளப்பள்ளி மக்கள் 3 மாதங்களாக குடிநீரின்றி அவதி

கரூர், ஜூலை 28- கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கள்ளப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கருப்பத்தூர், கள்ளப்பள்ளி கிராமப் பகுதிகளில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த மக்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல், பொதுமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஆற்றில் குழி பறித்து ஊத்து போட்டு, தண்ணீர் எடுத்து வருகின்றனர். அது மட்டுமின்றி 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள மகிளிப்பட்டி சென்று, ஏர் வால்வில் கசியும் தண்ணீரை குடத்தில் பிடித்து வருகின்றனர். நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வர முடியாமல், பொதுமக்கள் கடும் மன உளைச்சலையும், சிரமத்தையும் நாள்தோறும் அனுபவித்து வருகின்றனர். அருகில் உள்ள வாய்க்கால்களில் பச்சை நிறத்தில் சென்ற சாயக்கழிவு தண்ணீரை பிடித்து குடித்ததால், சிலர் காய்ச்சல், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர். குடிப்பதற்குகூட தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தண்ணீர் கேட்டு பலமுறை ஊராட்சி மன்றத் தலைவர், கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய குழு நிர்வாகம் என அரசு அலுவலர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மறியல் - பேச்சுவார்த்தை இதைக் கண்டித்தும், உடனடியாக தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் கரூர் -திருச்சி சாலையில் இலாலாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தை நோக்கி சாலை மறியல் செய்வதற்கு வந்தனர்.  அப்போது இலாலப்பேட்டை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் வந்த கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் நேரில் சென்று தண்ணீர் கொடுப்பதற்கு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.