தஞ்சாவூர், பிப்.16– தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில், ஃபார்மலின் ரசாயனம் பயன்படுத்திய மீன்களை விற்பனை செய்வதாக பொதுமக்கள் உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சனிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு, பட்டுக்கோட்டை மீன்வளத்துறை ஆய்வாளர் வீரமணி, பிலிப்ஸ் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் மார்க்கெட்டில் உள்ள மீன்களை ஆய்வு செய்தனர். இதில், ஐந்து கடைகளில், அழுகிய நிலையிலும், சாப்பிட தகுதியற்ற நிலையிலும், இருந்த 167 கிலோ மீன்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை விற்பனைக்காக வைத்திருந்த ஐந்து கடைகளுக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை விடுத்தனர். இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் வேல்முருகன் கூறிகையில், பட்டுக்கோட்டைக்கு பெரிய ரக மீன்கள் பெரும்பாலும், துாத்துக்குடி, கன்னியாகுமரி, கேரளா போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இவை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டு வரப்படும் சூழலில், மீன்பிடிக்கும் இடங்களில் இருந்து எப்போது பேக் செய்யப்பட்டது என தெரியாது. இதனால் அழுகிய மீன்கள் வந்து இருக்கலாம். மேலும், உள்ளூர் கடல் பகுதிகளில் மீன்களை விற்பனைக்காக வாங்கினாலும், விடுமுறை தினங்களில் அதிக அளவில் விற்பனைக்காக பதுக்கி வைத்து இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம். ரசாயனம் கலந்த மீன்களை உண்பதால் உடலில் உள்ள உறுப்புகள் செயலிழப்பு ஏற்படும் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் இதுபோன்ற மீன்களை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டது” என்றார்.