districts

திருச்சி முக்கிய செய்திகள்

பேராவூரணி - பட்டுக்கோட்டை வழித்தடத்தில்  பழைய பேருந்துக்கு பதில் புதிய பேருந்து இயக்கம்

தஞ்சாவூர், மார்ச் 8-   பேராவூரணி- பட்டுக்கோட்டை வழி ஒட்டங்காடு பாலத்தளி துர்க்கை அம்மன் கோவில் வழித்தடத்தில் தடம் எண் - ஏ 39 ஏ பழைய நகரப் பேருந்துக்கு பதிலாக, மகளிர் விடியல் பயணம் புதிய பேருந்து துவக்க விழா சனிக்கிழமை காலை பேராவூரணி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் (தொழில்நுட்பம்) எஸ்.ராஜேஷ், பேராவூரணி கிளை மேலாளர் கே.மகாலிங்கம், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.பழனிவேல், மாநில மீனவரணி துணைச்செயலாளர் ஜெயபிரகாஷ், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி மற்றும் கட்சியினர், அலுவலர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், கலந்து கொண்டனர்.

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, மார்ச் 8-  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில், ‘தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் (பொ) ஆ.ஜானகி தலைமை வகித்தார். கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் செ.மணிகண்டன் வரவேற்றார். கணித துறைத் தலைவர் கா.அர்ச்சுணன் தொடக்கவுரையாற்றினார். தீயணைப்பு செயல்பாடுகள் குறித்து தலைமை தீத்தடுப்பு அலுவலர் குழந்தைராசு, தீணணைப்பு அலுவலர் ஜான் ஆகியோர் கருத்துரை வழங்கினார். பேரிடர் மேலாண்மை பயிற்றுநர் ராஜ்குமார் ஆலங்குடி தீத்தடுப்பு நிலைய குழுவினருடன் இணைந்து, விழிப்புணர்வு பயிற்சியை அளித்தனர். கௌரவ விரிவுரையாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

பணியின்போது உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்

அரியலூர், மார்ச் 8-  ஜெயங்கொண்டம் அருகே, பணியின் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ராஜராம் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, அரியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் ராஜாராம்(28). ஜெயங்கொண்டம் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணிப் புரிந்து வந்த இவர், வியாழக்கிழமை அர்த்தனேரி கிராமத்தில் மின் கம்பத்தின் மீது ஏறி பராமரிப்பு பணி செய்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்கள் (கேங்மேன்) சங்க மண்டல செயலர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செந்தூர் அதிவிரைவு ரயிலுக்கான தனி முன்பதிவு ஒதுக்கீட்டை கும்பகோணம் வரை நீட்டிக்க கோரிக்கை

கும்பகோணம், மார்ச் 8-  கும்பகோணம் வழியாக சென்னையில் இருந்து திருச்செந்தூர் வரை தினசரி இயக்கப்படும் செந்தூர் அதிவிரைவு ரயிலுக்கான தனி முன்பதிவு ஒதுக்கீட்டை கும்பகோணம் வரை நீட்டிக்க ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க 62 ஆவது ஆண்டுவிழா கும்பகோணத்தில் சங்க தலைவர் எம்.எம். ஜமீல் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு கும்பகோணம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சோழா மகேந்திரன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து, செயலாளர் ஏ. கிரி விளக்கிப் பேசினார். சென்னை எழும்பூர் திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் விரைவு ரயிலில், தற்போது தஞ்சாவூர் திருச்செந்தூர் இடையே தனி முன்பதிவு ஒதுக்கீடு வசதி உள்ளது. கும்பகோணம் பகுதியில் இருந்து நெல்லை திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவில் பயணிகள் பயணிக்கின்றனர். எனவே அந்த தனி முன்பதிவு ஒதுக்கீட்டை கும்பகோணம் வரை நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். விழாவில் முக்கிய விருந்தினராக, திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் வி.ஜெயந்தி கலந்து கொண்டு, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கினார். விழாவில், பணி ஓய்வுபெற்ற நிலைய மேலாளர் எஸ். ராமலிங்கம், வணிக எழுத்தர் டி. கலாவதி, ஊழியர் எம். மாரியம்மாள் ஆகியோரின் பணிக்கால பயணிகள் சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்க இணைச் செயலாளர் ஹரிசங்கர் ராஜா, கும்பகோணம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் சத்தியநாராயணன், திருச்சி கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர் பாபநாசம் சரவணன், தஞ்சாவூர் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்க செயலாளர் மனோகரன், கும்பகோணம் நுகர் பொருள் வணிகர் சங்க செயலாளர் வேதமுரளி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.  விழாவில், துணைத் தலைவர் எம். மாறன், செயற்குழு உறுப்பினர்கள் ரேவந்த் குமார், தீபக் வசந்த், அரிஹந்த், ராகவன் முரளிதாஸ் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும், பயணிகளும் கலந்து கொண்டனர். இணை செயலாளர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

மன்னார்குடியில் மகளிர் தின விழா

மன்னார்குடி, மார்ச் 8-  மன்னார்குடி எல்ஐசி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தினவிழா நடைபெற்றது.  விழாவிற்கு எல்ஐசி.யின் உதவி கிளை மேலாளர் வி. வினிகுமாரி தலைமை வகித்தார் ஏ. பரமேஸ்வரி வரவேற்றார். சேரன் குலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ஜி.க. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எல்ஐசி அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டு விழாவினை துவக்கி வைத்தார். மகளிர் தினத்தின் வரலாற்றினையும், மகளிர் தினத்தின் தேவைகளைப் பற்றியும் சிறப்புரையாற்றினார்.  எல்ஐசி ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள், பாலிசிதாரர்கள் வாழ்த்திப் பேசினர். டி உஷாராணி நன்றி கூறினார்.

படைவீரர், முன்னாள் படைவீரர்  சிறப்பு குறைதீர் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 8-  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த படைவீரர், முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் முதல்வரின் காக்கும் கரங்கள் கூட்டம் மார்ச் 10 ஆம்  தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு திருச்சி ராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த படைவீரர், முன்னாள்  படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தோர் கலந்து கொண்டு  தங்களது குறைகளை மனுக்கள் வாயி லாக இரட்டைப் பிரதிகளில் மாவட்ட ஆட்சி யரிடம் நேரில் அளித்து பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை:  இருவர் போக்சோவில் கைது

தஞ்சாவூர், மார்ச் 8–  ஒரத்தநாடு அருகே, 10 வயது சிறுமிக்கு, நொறுக்குத்தீனி கொடுத்து ஏமாற்றி, பாலியல் தொல்லை அளித்த இருவரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் காவல் சரகத்திற்குட்பட்ட, ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு படித்து வரும் 10 வயது மாணவி, பள்ளியில் கடந்த இரண்டு நாளாக சோர்வாக இருந்துள்ளார். இதை கண்காணித்த பள்ளி ஆசிரியை ஒருவர், மாணவியிடம் விசாரித்துள்ளார். அப்போது, மாணவி தன்னிடம் இரண்டு பேர் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். உடனே, பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு, சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர். மகளிர் காவலர்கள் சிறுமியிடம் விசாரித்த நிலையில், ராஜேஷ் (35), முகிலரசன் (40), இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மை எனத் தெரியவந்தது. காவல்துறை விசாரணையில், ராஜேஷ் டிப்ளமோ படித்து விட்டு, வேலைக்குச் செல்லாமல், முகிலரசனுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும், அப்பகுதி சிறுவர்கள், சிறுமிகளுக்கு, அவ்வப்போது நொறுக்குத் தீனி வாங்கிக் கொடுத்து பேசி வருவது வாடிக்கை. அத்துடன் பெண்களை ஆபாசமாக போட்டோ எடுத்தும் வந்துள்ளனர். அப்படியாக, 10 வயது சிறுமிக்கும் அடிக்கடி நொறுக்குத் தீனியை வாங்கிக் கொடுத்து, ராஜேஷ் மற்றும் முகிலரசன் இருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.  இது தொடர்பாக, ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்துறையினர் ராஜேஷ், முகிலரசன், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.