தஞ்சாவூர், பிப்.16- தஞ்சாவூரில் காட்டு மாட்டைப் பார்த்ததாக பொதுமக்கள், வெள்ளிக்கிழமை இரவு அளித்த தகவலின் அடிப்படையில், வனத் துறையினர் 4 குழுக்கள் அமைத்து தேடி வருகின்றனர். தஞ்சாவூர் கரந்தை அருகே கோடியம்மன் கோவில், சுங்கான்திடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை காட்டு மாடு ஒன்றை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதேபோல், நாகை சாலை ஞானம் நகரில் காட்டு மாடு சுற்றியதை இரவு அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதை சிலர் கைப்பேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இத்தகவல் வனத் துறையினருக்குச் சென்றதையடுத்து, வெள்ளிக்கிழமை ஞானம் நகர், காட்டுத்தோட்டம், மாரியம்மன் கோவில், தளவாய்ப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் சாதனம் மூலம் தேடினர். ஆனால், காட்டு மாட்டைக் கண்டுபிடிக்க முடியாததால், மாவட்ட வன அலுவலர் எம். அனந்தகுமார் தலைமையில் 4 குழுக்கள் அமைத்து வனத் துறையைச் சேர்ந்த ஏறத்தாழ 20 பேர் தேடி வருகின்றனர். இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்தான் காட்டு மாடுகள் இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து காவிரி அல்லது கொள்ளிடம் ஆற்றுப்படுகை வழியாக இந்தக் காட்டு மாடு வந்திருக்கலாம். இதை மற்ற பகுதிகளிலும் மக்கள் பார்த்திருக்க வாய்ப்புள்ளது. இங்கு பார்த்த மக்கள் தகவல் தெரிவித்ததால் வெளியில் தெரியவந்துள்ளது. நடுத்தர வயதுடையதாகத் தெரியும் இந்தக் காட்டு மாடு யாரையும் முட்டவோ, பொருட்களைச் சேதப்படுத்தவோ இல்லை. இதனிடையே, காட்டு மாட்டைப் பிடிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். இதேபோல், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பூதலூர் அருகே வளம்பக்குடி கிராமத்துக்குள் வந்த காட்டு மாடு பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.