திருச்சிராப்பள்ளி/பெரம்பலூர், டிச.3 - அனைத்துப் பணியாளர்களுக்கும் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மின் வாரியத்தில் 62,000 காலிப் பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். பேசி முடிக்கும் வரை 1.12.2023 முதல் இடைக்கால நிவாரணம் ரூ.5000/- வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மிளகுபாறையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர். கோட்டத் தலைவர் ஜான் பாஸ்கோ ரவி நன்றி கூறினார்.
பெரம்பலூர் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு பெரம்பலூர் வட்டக் கிளை சார்பாக பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மண்டல செயலாளர் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தார். அமைப்பின் வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.