மயிலாடுதுறை, ஜன.25 - பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிப்பதோடு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல்லினை கொள்முதல் செய்யும் போது ஈரப்பதம் 17 சதவீதம் என்பதை 22 சதவீத மாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் செம்பனார்கோவில் ஒன்றியம், ஆக்கூர் முக்கூட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் தோட்டம் ஜி.ஜோதி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் பி.குணசுந்தரி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தெட்சிணாமூர்த்தி, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கண்ணகி, வீ.எம்.சரவணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் சீர்காழி ஒன்றியத் தலைவர் வழக்கறிஞர் ஞானபிரகாசம், மாவட்டப் பொருளாளர் செல்லப்பன், அசோகன் உள்ளிட்டோர் போராட்டத்தை விளக்கி உரையாற்றினர். கொள் ளிடம் ஒன்றியம் சார்பில் கொள்ளிடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்.சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற தஞ்சை கோட்ட அளவிலான விவசா யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். அதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் என்.வி.கண்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி, வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில், “பருவம் தவறிப் பெய்த கனமழை மற்றும் அதிக பனிப்பொழிவு காரண மாக அறுவடைக்கு தயாரான கதிர்கள் சாய்ந்து கிடக்கிறது. பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு வட்டா ரங்களில் பல விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியதால் அறுவடை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் மிகப்பெரிய பாதிப்பை விவசாயிகள் சந்திக்க நேர்ந்துள்ளது. எனவே, அறுவடை இயந்திரங்களை கொண்டு அறு வடை செய்கிறபோது மிகுந்த சேதம் ஏற்படும் என்ற நிலை உள்ளது. மேலும் பூதலூர் வட்டாரத்தில், கடந்த ஆண்டு முற்றிலும் விவசாயம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு விவ சாயம் நடைபெற்ற நிலையில், நெல் பழம் என்று கூறப் படும் பூஞ்சாண நோயின் தாக்கத்தால் கதிர் முழுவதும் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் மாறி நெல்மணிகள் பத ராகவே உள்ளது. கதிரைத் தொட்டால் பச்சை நிறத்தில் துகள்களாக பறக்கின்றன. இதனால் பெரும் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே மேற்கண்ட பாதிப்புகளை அலுவலர்கள் உடனே கணக்கீடு செய்து, பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலங்களுக்கு இழப்பீடு கிடைக்க வருவாய் கோட்டாட்சியர் பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.