districts

img

காஞ்சிபுரத்தில் இட நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறும் மாநகராட்சி பள்ளி

காஞ்சிபுரம், ஜூலை 30 - காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப் பள்ளி வகுப்பறையினை யொட்டி தொடக்கக்கல்வி அலுவலகம் அமைந்துள்ளதால் மாணவர்கள் இட நெருக்கடியில் அவதிக்குள்ளாகியுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கவரைதெரு பகுதியில் இயங்கி வருகிறது இராணி அண்ணாதுரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி. தொடக்கப்பள்ளி , நடுநிலைப்பள்ளி, உயர்நிலைபள்ளி என மெல்ல மெல்ல தரம் உயர்ந்து தற்போது மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. அரசு பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மாணவர் தேர்ச்சி என்பதால், ஏழை எளிய தினக் கூலி மக்கள் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வைக்கின்றனர். கடந்தாண்டு 514 மாணவிகள் கல்வி பயின்ற நிலையில் , தற்போது 592 மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு ஆங்கில வழி பிரிவில் 47 மாணவிகளும், தமிழ் வழி பிரிவில் 64 மாணவிகள் என ஒரே வகுப்பறையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்விக்கு பயின்று வரு கின்றனர். மேலும் 11 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் 100 மாணவிகள், கலை பிரிவில் 76 மாணவிகள் என ஒரே அறையில் மாறி மாறி கல்வி கற்று வரு கின்றனர். இந்த பள்ளிக்கு சொந்தமான மூன்று வகுப்பறைகளில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் செயல்பட்டு வருவதால் மாணவிகள் ஒரே அறையில் கல்வி கற்கும் நிலையும் உருவாகி வருகிறது. தொண்டு நிறுவனம் புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்த கட்டிடத்திலும் மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆகவே மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை இடமாற்றம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மாணவிகள் போதிய இட வசதி இல்லாமல் அவதிப்படும் நிலையில் கல்வித்துறை இது குறித்து கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் மனு அளித்து முறையிடப்பட்டபோது விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் இது வரை அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட வில்லை. இந்நிலையில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு ஆகியோர் இணைந்து  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை  சந்தித்து விரைவில் இடம் மாற்றம் செய்து தர வேண்டும் எனவும், மாணவிகளின் உடல்நலன் மற்றும் கல்வி நிலை கருத்தில் கொண்டு இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.