ஒன்றிய பாஜக அரசு, பெண்களை நூறு சதவிகித பயனாளிகளாகக் கொண்டிருக்காத திட்டங்களையும் பாலின பட்ஜெட் அறிக்கையின் பகுதி A திட்டங்களாக சேர்த்து, பாலின பட்ஜெட்டிற்கு பாஜக ஆட்சிதான் அதிக ஒதுக்கீடு செய்திருக்கிறது என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கி வருகிறது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமப்புற வீடுகட்டும் திட்டத்தின் (PMAY-G) பயனாளிகளில் 69.1% (2023 ஆண்டு) பயனாளிகள் மட்டுமே பெண்களாக இருக்கையில், இந்தத் திட்டத்தை 100 சதவிகித பெண் பயனாளிகளைக் கொண்ட பகுதி A திட்டங்களில் நிதி அமைச்சகம் சேர்த்துள்ளது.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சச்சிதானந்தம், இப்படி பாலின பட்ஜெட்டை ஊதிப்பெரிதாக்கும் ஒன்றிய அரசின் அணுகுமுறை குறித்து நிதி அமைச்சகத்திற்கு கேள்வி எழுப்பி இருந்தார். பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் பயனாளிகள் 100 சதவிகிதம் பெண்களாக இல்லாத பட்சத்தில், ஏன் பகுதி A வில் சேர்க்கப்பட்டது? பாலின பட்ஜெட் ஒதுக்கீடுகளைத் தவறாக ஊதிப்பெருக்காமல், உள்ளது உள்ளபடி அசலான பெண்கள் மேம்பாட்டிற்கான ஒதுக்கீடு எவ்வளவு எனக் குறிப்பிடுவதற்காக ஒன்றிய அரசிடம் உள்ள திட்டம் என்ன? ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.
பாலின பட்ஜெட் அறிக்கையின் பகுதி A பிரிவில் PMAY-G திட்டத்தை சேர்த்தது தவறு என்பதை ஒத்துக்கொள்ளாமல் நிதி அமைச்சகம், “PMAY-G திட்டத்தின் கீழ் வீடுகள் பெண்கள் பெயர்களுக்கு மட்டும்தான் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கடந்த 2022-2023 ஆம் ஆண்டு முதல், மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதனால், ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை இந்தத் திட்டத்தை பகுதி A வில் சேர்த்துள்ளது” எனப் பதில் அளித்துள்ளது.
திட்டத்தின் விதிகள் 100 சதவிகிதப் பயனாளிகள் பெண்களாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அமலாக்கம் நூறு சதவிகித பெண் பயனாளிகளைக் கொண்டிருக்கவில்லை. 69.1% பெண் பயனாளிகளை மட்டுமே கொண்டிருக்கிறது. எனவே, 33-99% பாலின ஒதுக்கீட்டைக் கொண்ட பகுதி B பிரிவில் தான் PMAY-G சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஒன்றிய அரசு இந்த விதிகளை காற்றில் பறக்க விட்டு, பாலின உட்கூறு ஒதுக்கீட்டை, தான் தவறாக ஊதிப்பெருக்கியதை, ஒப்புக்கொள்ளாமல், பழியை மாநில அரசுகள் மீது போடுகிறது என்பது நிதி அமைச்சகத்தின் பதிலில் இருந்து வெளிப்படுகிறது.
மேலும், இனி உள்ளது உள்ளபடி அசலான பாலின பட்ஜெட் அறிக்கை தயாரிக்க என்ன நடவடிக்கைகளை அரசு எடுக்கவுள்ளது என்கிற கேள்விக்கு, இந்த அம்சத்திற்குப் பொறுப்பான பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மத்திய அரசு, மாநில அரசு அமைச்சக அதிகாரிகளுக்கு பாலின பட்ஜெட் குறித்த பயிற்சி வழங்கவுள்ளது என்று பதில் தெரிவித்துள்ளது. ‘Gender Led Development’ (பாலின சமத்துவ அடிப்படையிலான வளர்ச்சி) என்கிற G-20 நோக்கத்தின்படி நாங்கள் செயல்படுகிறோம் என்ற போலி பிம்பத்தை சர்வதேச அரங்கில் சித்தரிக்கும் நோக்கில், பாஜக ஒன்றிய அரசு பாலின பட்ஜெட் அறிக்கைகளை ஊதிப்பெரிதாக்குவதை கைவிட வேண்டும். பாலின பாகுபாடுகளைக் களைந்து சமத்துவம் மலரச் செய்திட, உண்மையாகவே திட்டங்கள் வகுத்து செயல்பட வேண்டும்.