districts

img

குன்றத்தூரில் சேதமடைந்த சிறு பாலம் !

காஞ்சிபுரம், அக். 4 – குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டூர் - சிக்கராயபுரம் விஸ்தரிப்பை இணைக்கும் சாலையில் உள்ள சிறுபாலம் சேதமடைந்துள்ளது. இதனால், இந்த வழியே கடக்கும் வாகன ஓட்டிகள் மரண பயத்தின் உச்சம் தொடுவதாக அச்சம் தெரிவித்துள்ளனர். குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பல்லாவரம் வட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், 42 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. குன்றத்தூரை அடுத்த மாங்காடு நகராட்சி, வார்டு 8ல் அலெக்ஸ் நகர் உள்ளது. பட்டூரையும் சிக்கராயபுரம் விஸ்தரிப்பு பகுதியையும் இணைக்கும் சாலை இங்கிருந்து பட்டூர் வழியாக ஒருபுறம் மாங்காட்டிற்கும், மறுபுறம் கோவூர் வழியாக குன்றத்தூருக்கும் செல்லும்  சாலை உள்ளது. மேலும் குன்றத்தூர், போரூர், மாங்காடு ஆகிய நகரங்களை இணைக்கும் சாலையாகவும் உள்ளது. இச்சாலையை கிராம மக்கள் மட்டுமின்றி, வாகன ஓட்டிகளும் குறுக்கு சாலையாக  பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையையொட்டி, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் மணப்பாக்கம் கால்வாய்க்கு செல்கிறது. இந்த இடத்தில் குறுக்கே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சிறு பாலம் அமைக்கப்பட்டது. தற்போது பாலத்தின் கீழ்பகுதியில்,  கான்கிரீட் தளங்கள் முழுவதும் சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளன. சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் எலும்புக்கூடுபோல் வெளியே தெரிகிறது. மழைக்காலங்களில், அதன் வழியாக தண்ணீர் ஓடையாக செல்கிறது. இதனால் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து பாலத்தின் உறுதி தன்மை பாதிப்பு அடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த பாலத்தில் பொதுமக்கள், அதிக பாரமுள்ள வாகனங்களை இயக்க கூடாது, என அறிவிப்பு பலகையும் மாங்காடு நகராட்சியால் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையும் சேதம் அடைந்து கீழே விழுந்துள்ளது.எனவே, பாலம் எவ்வித அசம்பாவிதங்கள் நடக்கும் முன்னரே, சேதமடைந்த பகுதிகளில் நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிபிஎம் சிக்கராயபுரம் கிளை செயலாளர் வி.ரமேஷ் பாபு கூறுகையில், இந்த பாலத்தின் தடுப்புச் சுவர் பாலத்தின் இருபுறமும் சேதமடைந்துள்ளது. இந்தப் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சில நேரங்களில் கனரக வாகனங்கள் வரும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உச்சம் தொடுகிறது. எந்த நேரத்திலும் இந்தப் பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் சேதமடைந்த பழைய பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலத்தை அமைத்து மாணவர்கள், கிராமமக்கள் பயன்பெறும் வகையில்  பாலத்தை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி ஒன்றியத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். - கார்த்திக் லிங்கநாதன்