சென்னை, அக். 25 - வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க கோரி வெள்ளியன்று (அக்.25) மாவட்ட ஆட்சியரிடம் உயர வளர்ச்சி தடைபட்டோர் மனு அளித்தனர். ஆண்டுதோறும் அக்.25ந் தேதியை உலக உயர வளர்ச்சி தடைபட்டோர் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி வளர்ச்சி தடைபட்டோர் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் மனு அளித்து பேசினர். அப்போது, 45வயது நிறைவடைந்து இருந்தாலும், உயர வளர்ச்சி தடை பட்டோருக்கு சிறப்பு நேர்வாக வேலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை ஏளனம் செய்வதை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்ய வேண்டும். தொழில் செய்ய அரசு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும், அனைத்து பேருந்துகளையும் உயரம் வளர்ச்சி தடைபட்டோர் பயன்படுத்தும் வகையில் மாற்றிட வேண்டும், உயரம் வளர்ச்சி தடைபட்டோர் பயன்படுத்தும் வகையில் சிறப்பு அமைப்புடன் கூடிய இருச்சக்கர வாகனம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வின்போது தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நிர்வாகிகள் டி.சுரேந்திரன், எஸ்.மனோன்மணி (மத்தியசென்னை), எஸ்.கிருஷ்ணன், எம்.குமார் (தென்சென்னை), ராணி, நடராஜன் (வடசென்னை) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.