districts

img

ஆட்டோ தொழிலாளர்களுக்கு குடிமனை பட்டா கோரி கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூர், ஜூலை 11- திருத்தணி நகரத்தில் வாடகை வீட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். திருத்தணி நகரத்தில் 300 கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. மக்களுக்கு எந்த நேரத்திலும் சேவையாற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும்பாலும் சொந்த வீடு இல்லாததால், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். கடனாக வாங்கிய ஆட்டோவிற்கு தவணை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதோடு குடும்பத்தையும் சேர்த்து கவனிக்க முடியாமல் தவிக்கின்றனர். இப்படி வறுமையில் வாழ்கின்றனர். மிகவும் குறைந்த வருவாயில் வாழும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு திருத்தணியில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இலவச வீடுகளை வழங்க வேண்டும், அல்லது குடிமனைகளையாவது வழங்கினால் ஆட்டோ தொழிலாளர்கள் சொந்தமாக வீடுகளை கட்டிக் கொள்ள வசதியாக மனைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருத்தணி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) சார்பில், செவ்வாயன்று திருத்தணி கோட்டாட்சியர் தீபாவிடம் மனு அளித்தனர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.கரிமுல்லா, மாவட்ட பொருளாளர் ஜெயவேல்,  நகர பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.