பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு
சென்னை,ஜூலை 30- நிகழாண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான உடனடி மாணவர் சேர்க்கை, புதனன்று (ஜூலை 31) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி மற்றும் 10 வகுப்பு தேர்ச்சி பட்டய படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி இவைகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2024 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சிக் கான தேர்வுகள் தமிழில் மட்டுமே எழுத வேண்டும். இப்பயிற்சிக்கு www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். புதன் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சி வகுப்புகள் பிராட்வே, தேனாம்பேட்டை மற்றும் செங்குன்றம் ஆகிய பயிற்சி நிலையங்களில் நடைபெறும். ஏற்கெனவே இப்பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயிற்சி நிலையத்தில் நேரடியாக தங்களது அசல் சான்றிதழ்களை சரிபார்த்த பின் சேர்க்கையினை உறுதி செய்து கொள்ள வேண்டும். இப்பயிற்சிக்கான கட்டணம் 18,750 ரூபாயை ஒரே தவணையில் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தங்கம் விலை குறைந்தது சென்னை,ஜூலை 30- தங்கம் விலை செவ்வாயன்று சவரனுக்கு ரூ.240 குறைந்தது ஒரு சவரன் ரூ.51,080-க்கும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.6,385-க்கும் விற்பனை செய்யப்படு கிறது.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி, ஜூலை 30- கள்ளக்குறிச்சியில் ஊரகப் பகுதிகளில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய ஆட்சியர்,“ பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை குறித்து மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் துறை வாரியாக ஆய்வு செய்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள மனுக்கள், தள்ளுபடி கான காரணங்களை சம்பந்தப் பட்ட அலுவலர்கள் உரிய முறையில் தெரியப்படுத்த வேண்டும்”என்றார்.
காலமானார்
ராணிப்பேட்டை,ஜூலை 30- ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம்-நெமிலி வட்டக் குழு உறுப்பினர் டி. பலராமன் மனைவி விஜயா (42) உடல் நலக் குறைவால் செவ்வாயன்று (ஜூலை 30) காலமானார். அவரது உடலுக்கு அரக்கோணம் வட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்டச் செயலாளர் என். காசிநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். வெங்கடேசன், வட்டக் குழு உறுப்பினர் சு. தென்னரசு, கட்டுமான சங்க நிர்வாகி சிவகுமார், தமுஎகச வட்டச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இருளர் இன மக்களின் சுடுகாடு ஆக்கிரமிப்பு: அகற்ற மறுக்கும் அதிகாரி
கிருஷ்ணகிரி, ஜூலை 30- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்தில் உள்ள ஜெகதேவி ஊராட்சிமன்றம். இங்குள்ள காமாட்சிபுரம் குடியிருப்பு பகுதியில் இருளர் இனத்தை சேர்ந்த 70 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 3 தலைமுறையாக பயன்படுத்தி வரும் சுடுகாட்டை நிலத்தை தனியார் கிரானைட் உரிமையாளர் தனக்கு சொந்தமான பட்டா நிலம் என கூறி ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதாக வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் இருளர் இன மக்கள் மனு கொடுத்துள்ளனர். மக்களவை தேர்தல் முடிந்த ஆய்வு செய்து சுடுகாட்டை மீட்டுத் தருவதாக பர்கூர் வட்டாட்சியர் உறுதியளித்துள்ளார். தேர்தல் முடிந்து 2 மாதங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, வட்டாட்சியரை சந்தித்து முறையிட்டபோது, அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனால், மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
சீர்மரபினருக்கு நிதி உதவி
ராணிப்பேட்டை, ஜூலை30 - தமிழ்நாட்டில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆகிய வகுப்பினர்கள் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக ஆயத்த ஆடையகம் உற்பத்தி பிரிவு அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆயத்த ஆடையகம் உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும் இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டம் மூலம் பயன் பெற விரும்புபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ஈட்டி பாய்ந்த மாணவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் : சிபிஎம் வலியுறுத்தல்
கடலூர், ஜூலை 30- கடலூர் மாவட்டம், வடலூரில் விளையாட்டு பயிற்சியின் போது, ஈட்டி தலையில் பாய்ந்து மாணவர் மூளைச்சாவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண வழங்க வேண்டும் என்று சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் கடலூர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நெய்வேலி தனியார் நிறுவன ஊழியர் திருமுருகன் (35). இவரது மகன் கிஷோர் (15). வடலூர் சந்தை தோப்பு எஸ்.டி.சீயோன் மெட்ரிக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். சிலம்பம் போட்டியில் மாநில அளவில் பரிசு பெற்றவர். பள்ளி மைதானத்தில் நடந்த விளையாட்டு பயிற்சியின் போது சக மாணவர் ஒருவர் எரிந்த ஈட்டி,கிஷோர் தலையில் குத்தியது. அதில் படுகாயமடைந்து மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் உயிரிழந்த கிஷோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.