சென்னை, ஏப். 7- குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தெரிவித்தார். ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி 40ஆவது வார்டில் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து ஞாயிறன்று (ஏப். 7) வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 3 ஆண்டுகளில் மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நடந்த அவலங்களை நன்கு அறிவீர்கள். ஒன்றிய அரசிடம் மாநில உரிமையை விட்டுக் கொடுத்தார்கள். சிஏஏ, புதிய வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட மக்கள் விரோத மசோதாக்களுக்கு ஆதரவு அளித்தனர். மழை வெள்ளம் மற்றும் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினேன். வடசென்னையில் அங்கன்வாடி மையம், மாநகராட்சி பள்ளி சீரமைப்பு, ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிழற்குடைகள் என பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளேன். தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்த சிந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இதில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், பகுதிச் செயலாளர் லட்சுமணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, விசிக மாவட்டச் செயலாளர் சவுந்தர், சிபிஐ மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ், த.கு.வெங்கடேஷ் வேம்புலி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.