districts

சென்னை முக்கிய செய்திகள்

100 நாள் வேலை கேட்டு தொடர் முழக்கப் போராட்டம்

செய்யூர், ஜூலை 11-  நிதிநிலை காரணம் காட்டி  100 நாள் வேலை மறுக்கப்படுவதை கண்டித்து  வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .  செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூனாம்பேடு அகரம் கொளத்தூர் போந்தூர், முகுந்தகிரி பெரிய களக்காடி மேல்மருவத்தூர் பொறையூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வேலையை நிதி யில்லை என கூறி வேலை வழங்க மறுக்கும் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலு வலகத்தை கண்டித்து சிபிஎம் ,  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வியாழனன்று (ஜூலை 11) தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடு பட்டனர் . சிபிஎம்  வட்ட குழு உறுப்பினர் எஸ் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வட்டச் செயலாளர் எஸ்.ரவி விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன், சங்கத்தின் நிர்வாகிகள் ராஜேந்திரன் ஜம்பு லிங்கம், கட்சியின் கிளை செயலாளர்கள் சாந்தி, ஜானகி, ரேவதி, சுதா, முருகேசன் உள்ளிட்ட பலர் பேசினர். இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சீனி வாசன் உடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரண்டு நாட்களுக்குள் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்த தன் பேரில் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

 இன்று மின்தடை

திருவள்ளூர், ஜூலை 11- திருவள்ளூர் மாவட்டத்தில் சின்னம்பேடு ஆரணி வடக்கு நல்லூர் புதுவயல் சோம்பட்டு பெருவயல் காரணி முதலம்பேடு கிளிக்கோடு கவரப்பேட்டை சின்னம் மேடு துறைநல்லூர் ஆரணி கொசவன்பேட்டை பாலவாக்கம் காரணி மங்கலம் ஆகிய பகுதிகளில் மின்பராமரிப்பு காரணத்திற்காக மின்தடை செய்யப்படஉள்ளது. சென்னை மின்தடை: பல்லாவரத்தில் பம்மல், டி.ஜி.நகர், ராதா நகர், கோவிலம்பாக்கம், கே.வி. விமான நிலையம், மீனாட்சி நகர் , எஸ்என்பி மூங்கில் ஏரி, பெருமா நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட பலஇடங்களிலும்அம்பத்தூரில் டிஐ சைக்கிள், அம்பத்தூர் மார்க்கெட், மொகப்பியர் தொழிற்பேட்டை, ரெட்டியபாளையம் சாலை, உள்ளிட்ட பல இடங்களிலும்,அரும்பாக்கத்தில்  நெற்குன்றம், பல்லவன் நகர், படேல் ரோடு, பிஎச் சாலை உள்ளிட்ட பல பகுதிகளிலும், ஆவடியில் புழல், விளாங்காடுபாக்கம், சிவராஜ் மெயின் ரோடு, தமிழன் நகர் உள்ளிட்ட பல இடங்களிலும், போரூரில் கொழுமணிவாக்கம், நெல்லித்தோப்பு மகாலட்சுமி நகர்,  பாலவராயன் தெரு பாபு நகர், ஜெகநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் , பொன்னேரியில் துரைனல்லூர், கவரபெட்டாய், கிஸ்முதால்ம்டு, கொண்டவகம், கொண்டவகம் , மங்களம் உள்ளிட்ட பல இடங்களிலும், அடையாறில்  வால்மீகி நகர், திருவான்மியூர், ரங்கநாதபுரம், உத்தியரங்கன்னி அம்மன் குட்டை, ராஜாஜி நகர் பகுதி 1, ஈசிஆர் மெயின் ரோடு உள்ளிட்ட பல இடங்களிலும் மின்சாரம் நிறுத்தப்படஉள்ளது.

நெரிசலை குறைக்க சிறப்பு பேருந்துகள்

சென்னை, ஜூலை 11- வார இறுதி நாளான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை-புறநகர் பகுதியில் இருந்து வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கி வருகின்றன. வார விடுமுறை தினங்களான வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னையில் இருந்து பிற இடங்க ளுக்கும், பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்ப கோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளியன்று 265 பேருந்துகள், சனிக்கிழ மையன்று  325 பேருந்துகள் இயக்கப்படும். இதுபோல, கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி,சனி நாட்களில் தலா 65 பேருந்துகள், பெங்க ளூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திரு வண்ணாமலைக்கு  இந்த இருநாட்களில்   தலா 15 என மொத்தம் 945 பேருந்துகள் இயக்கப்படும். இதுதவிர ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் மோகன் தெரிவித்தார்.

 பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும்  ஆலோசனை: என்.ஆர். காங்கிரஸ் கலக்கம் !

புதுச்சேரி, ஜூலை 11- என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில்  போட்டியிடும்  அமைச்சர்  நமச்சிவாயம் தோல்வி யடைந்தார்.  இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக போர் கொடி உயர்த்தியும், சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.  இதுகுறித்து பாஜக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தில்லி சென்று மேலிட தலைவர் களை சந்தித்து புகார் கூறியிருந்தனர். அதனை தொடர்ந்து புதுச்சேரிக்கு வந்த பாஜக மேலிட பொறுப் பாளர் சுரோனா, அதிருப்தி  பாஜக எம்எல்ஏக்களை சந்தித்து சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால், பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், வியாழக் கிழமை (ஜூலை 11) புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக உறுப்பி னர் ஜான் குமார் தனது அறையில் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான் குமார், நியமன உறுப்பினர் வெங்கடேசன், பாஜகவிற்கு ஆதரவளிக் கும் சுயேச்சை உறுப்பினர் சிவசங்கரன் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடு பட்டார். இதுகுறித்து கல்யாண சுந்தரத்திடம் கேட்டபோது, “எங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தோம்” என்றார்.

பயிர் காப்பீடு செய்ய புதுச்சேரி  வேளாண்துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி, ஜூலை.11- புதுச்சேரி அரசின், வேளாண் விவசாயிகள் நலத்துறை சார்பில் பிரத மரின் பயிர் காப்பீட்டுத்  திட்டம் செயல்படுத்தப்படு கிறது.  விதைப்புக்கு முந்தைய  நிலை முதல் அறுவடைக்குப்  பிந்தைய நிலை வரை, தவிர்க்க முடியாத அனைத்து இயற்கை பேரிடர்களுக்கு எதிராக விவசாயிகளின் விரிவான இடர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.  கிசான் கிரெடிட் கார்டு  மூலம் பயிர் கடன் எடுத்த  விவசாயிகளின் பெயர்களை  தானாகவே காப்பீட்டின் கீழ் வருகிறது. மற்ற பயிர்  கடன் பெறாத விவசாயிகள்  தங்களின் காப்பீட்டை பொது சேவை மையங்களை அணுகி திட்டத்தில் இணைய வழி செய்யப்படு கிறது.  நெல், சொர்ணவாரி, சம்பா, நவரை, உளுந்து ,  பாசிப்பயறு, நிலக்கடலை, கரும்பு, வாழை பயிர் களுக்கு காப்பீடு செய்யப் படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை உழவர் உதவியகத்தில் பெறலாம்.  பூர்த்தி செய்த விண்ணப் பங்களை சமர்ப்பிக்க வேளாண் அலுவலரிடம் விதைப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்று வேளாண் துறை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலில் குளித்த மாணவர் பலி

சென்னை, ஜூலை 11- சென்னை கண்ணகி நகர் 4ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமரன் (16). இவர் திருவான்மியூர் கொட்டி வாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். செந்தில்குமரன், புத னன்று பள்ளி நேரம் முடி வடைந்த பின்னர், தனது நண்பர்களுடன் கொட்டி வாக்கம் குப்பம் வந்து, கடலில் இறங்கி குளித்தனர்.  ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த செந்தில்குமரன், அங்கு வந்த பெரிய அலையில் சிக்கிக் கொண்டார். இதில் செந்தில்குமரன் சத்த மிட்டதை கவனித்த, அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் செந்தில்குமரன், கடலில் மூழ்கினார். நண்பர்கள் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த மீனவர்கள்  செந்தில்  குமாரை தேடினர்.  ஆனால் சடலம்தான் கிடைத்தது.

கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்

கடலூர், ஜூலை 11- கடலூர் முதுநகர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 1000 க்கும் மேற்பட்ட  விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள னர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த அழகுமுத்து, நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து கோபியும் ஒரு வருடமாக விசாரணைக் கைதிகளாக ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 11) இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை  ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இருவரையும் வேறு வேறு அறையில்  அடைத்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளங்கலை செவிலியர் தேர்வு ஜூலை 14  நடைபெறுகிறது

புதுச்சேரி, ஜூலை 11- புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் பிஎஸ்சி நர்சிங்   படிப்பிற்கான சென்டாக் (கலந்தாய்வு)  அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை14) நடைபெறவுள்ளது. புதுச்சேரியில் 6 தேர்வு மையங்களில், காரைக்காலில் 2 தேர்வு மையங்களில், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில்  தலா 1 தேர்வு மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள்  https://www.centacpuducherry.in/ எனும் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் இருந்து ஜூலை 10 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இது தொடர்பாக ஏதேனும் விவரம் (அ) உதவி தேவைப் பட்டால், தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை  10 மணி முதல், மாலை 5 மணி வரை 0413-2229355 என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனரும் தேர்வு கட்டுப்பாட்டு  அதிகாரியுமான மரு. ஸ்ரீராமலு  தெரிவித்துள்ளார்.

மயிலாப்பூர் நிதி நிறுவனம் முன்பு முதலீட்டாளர்கள் போராட்டம்

சென்னை, ஜூலை 11 - தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி  லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்த  முதலீட்டார்கள் பணம் கேட்டு வியா ழனன்று (ஜூலை 11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. 150  ஆண்டுகள் பழமையான இந்த நிதி  நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத்தொகை உறுப்பினர்களாக உள்ளனர். 525 கோடி ரூபாய்க்கு மேல் நிரந்தர வைப்புத் தொகை உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பாஜகவை சேர்ந்த தேவநாதன் யாதவும், நிரந்தர நிதி  செயலாளராக ரவிச்சந்திரனும் உள்ளனர். நிரந்த வைப்பு வைத்தவர்கள் முதலீட்டு தொகையை திரும்ப கேட்டு கடந்த 5 மாதங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் 150க்கும் மேற்பட்டோர் தங்களது பணத்தை திரும்ப கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு, ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து  காவல்துறை உதவி ஆணையர்  விவேகானந்தன் பாதிக்கப்பட்டவர் களோடும், நிர்வாகத்தோடும் பேசினார். அதன்பிறகு, 35 கோடி ரூபாயை அடுத்த சில தினங்களில் விடுவிப்பதாக நிதி செயலாளர் ரவிச்சந்திரன் தெரி வித்துள்ளார்.

டாக்டர் உட்பட 4 பேருக்கு மூச்சுத்திணறல்

ஆவடி, ஜூலை 11- ஆவடி புதிய ராணுவச் சாலை யில் தனியார் மருத்துவமனையில் டாக்டர் உட்பட 4பேருக்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்டது. புதனன்று திடீரென ஏற்பட்ட மின்தடையால்  ஜெனரேட்டரில் இருந்து அதிக அடர்த்தியுடன் டீசல் வாசனை கலந்த புகை வெளியேறியுள்ளது. இதனால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர் வினோதினி (24), செவிலியர் காயத்ரி (20),  மற்றும் அனிதா (24)  அன்பு (41)  ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.  அவர்களை மீட்டு  அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் வீடு திரும்பினர். இதுகுறித்து ஆவடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.