சென்னை,செப்.10- தூய்மையான சென்னை என்பதை வலி யுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஞாயிறன்று சென்னையின் 4 இடங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மிதி வண்டிப் பயணம் நடைபெற்றது. ஈ.சி.ஆர், வி.ஜி.பி., கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர், அண்ணா நகர் டவர் பூங்கா, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் தொடங்கி, ரிப்பன் கட்டிட வளாகத்தில் நிறைவு பெற்றது. மிதிவண்டிப் பயணத்தில் 'லிட்டர் பிரி சென்னை' என்ற தோற்றத்தில் மேயர் பிரியா கலந்து கொண்டார். மிதி வண்டிப் பயணத்தில் அதிக நபர்களை பங்குபெற செய்த வீ ஆர் தி சென்னை சைக்கிளிஸ்ட் குரூப் என்ற குழுவின் தலைவர் பெலிக்ஸ் ஜானுக்கும் இந்து குழும பிரதிநிதிகளுக்கும் பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இந்து குழும நிர்வாகிகள், மிதி வண்டி பயணத்தில் பங்கேற்றவர்கள் கலந்து கொண்டனர்.