செங்கல்பட்டு, ஆக. 19- மதுராந்தகம் அருகே ஆதி திராவிடர் மக்களுக்கு சுடுகாட்டு பாதை கேட்டு ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கோட்டம், அச்சிறுப்பாக்கம் குறு வட்டத்திற்கு உட்பட்ட பொற்பனங்கரணை கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட வள்ளுவ ஆதிதிராவிடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது பகுதியில் இறந்தவர்களின் சடலங்களை சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்து வரு கின்றனர். இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பாக கல்லியக்குனம் கிராமத்தை சார்ந்த அருணகிரி என்பவர் பெயரில் மேற்படி மயான பாதையை உள்ளடக்கிய இடம் புன்செய் சர்வே எண். 168/7B, பரப்பு 1.34.5 ஏர்ஸ். பட்டா எண்.15 என்று யூடிஆர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மயானத்திற்கு செல்லும் பாதையை கடந்த 150 ஆண்டு களுக்கும் மேலாக ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பட்டா உரிமையாளர் அருணகிரி இறந்துவிட்டார். இந்நிலையில் அவரது மகன் பாபு என்பவர் கடந்த ஒரு வருட காலமாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வரும் மயான பாதையில் இறந்த வர்களின் சடலங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்து, மயான பாதையை உழுது பாதையின் வழித்தடத்தை அழித்துள்ளார். தடுப்பு வேலி அமைக்க திட்டமிட்டுள்ளார். இதை கேட்கச் சென்ற இந்து வள்ளுவ ஆதிரதிராவிட மக்களை அடியாட்களை கொண்டு மிரட்டியும், தகாத வார்த்தைகளால் பேசியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பட்டியலின மக்களுக்கு இந்த வழியை தவிர மயானத்திற்கு செல்ல வேறு எந்த பாதையும் இல்லை. இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் மயானசாலையை தடுக்கும் வகையில் பாபு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் க.புரு சோத்தமன் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில் வள்ளுவ ஆதி திராவிட மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் பாபுவின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாபுவின் தந்தை அருணகிரி பேரில் யூடியாரில் தவறுதளாக வழங்கப்பட்டுள்ள 15-ம் எண் பட்டாவை ரத்து செய்வதுடன், இம்மனு மீது வருவாய் துறையின் மூலம் இறுதி உத்தரவு வரும் வரை பாபுவோ அவரை சார்ந்தவர்களோ மயான பாதையில் எந்த விதமான இடையூறோ ஆக்கிரமிப்போ, தொந்தரவோ அல்லது அப்பாதையை அடைக்கும் செயல்களிலோ ஈடுபடக்கூடாது. பொதுமக்கள் மேற்கண்ட சர்வே எண்ணில் உள்ள மயானபாதையை தொடர்ந்து பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டுள்ளது. ததீஒமு முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர். ம.பா.நந்தன், மாவட்ட துணைச் செயலாளர். மு.முனிச்செல்வம், தமுஎகச செங்கை கிளை செயற்குழு உறுப்பினர். பிரகாஷ், வழக்குரைஞர் சம்பத் மற்றும் கிராம மக்கள் உடன் இருந்தனர்.