கள்ளக்குறிச்சி, அக். 27- திருநங்கைகள் சுயதொழில் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் அறிவுறுத்தினார். மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறையின் மூலமாக ஒவ்வொரு மாதமும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி வருகிறது. அதன்படி, மாவட்டத்திலுள்ள 3 திருநங்கைகள் சுய உதவி குழுவுக்கும் புதிதாக சுய தொழில் தொடங்குவதற்கும் ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும் கடன் உதவி வழங்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு கிராம வங்கி மற்றும் ஒளி என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து 16 திருநங்கை சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான 12 லட்சம் ரூபாய் வங்கி கடனுதவிக்கான காசோலையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், “ சுயதொழில் மூலம் தங்களுடைய வாழ்வாதாரத்தை திருநங்கைகள் உயர்த்திக் கொள்ள வேண்டும்” என்றார். மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மண்டல மேலாளர் (தமிழ்நாடு கிராம வங்கி) அல்வின் ரத்தினராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.